நீதிமன்றம் கட்ட நிலம் தந்தவரை அலைகழித்தஅரசு-வட்டியுடன் நிவாரணம் தர உத்தரவு
சென்னை:மதுரை உயர்நீதிமன்றக் கிளை அமைப்பதற்கு நிலம் கொடுத்தவருக்கு அவருக்கான நிவாரணத் தொகையுடன் வட்டியும் சேர்த்து ரூ. 36.59 லட்சம் நிவராணத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை உலகநேரியில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை அமைந்துள்ளது. இது அமைந்துள்ள நிலம் மதுரை ஜெய்ஹிந்துபுரத்தைச் சேர்ந்த சம்சுதீன் என்பவருக்குச் சொந்தமானதாகும்.
உயர்நீதிமன்றக் கிளை கட்டடம் கட்டுவதற்காக சம்சுதினுக்குச் சொந்தமான நிலத்தில் 3 ஹெக்டேர் நிலத்தை அரசு கையகப்படுத்தியது. ஆனால் அதற்குரிய விலையை சம்சுதினுக்கு அரசு கொடுக்கவில்லை. இதனால் அவர் மதுரை விரைவு நீதிமன்றத்தை கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் அணுகினார்.
அதை விசாரித்த நீதிமன்றம், சம்சுதினுக்கு வழங்கப்பட்ட நிலத்துக்கான விலையை அதிகரித்து உத்தரவிட்டது. ஆனால் அந்தத் தொகையை அரசு வழங்கவில்லை.
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சம்சுதீன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சம்சுதீனுக்கு வழங்க வேண்டிய தொகையுடன் வட்டியையும் சேர்த்து ரூ. 36.59 லட்சம் பணத்தை அரசு 3 மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.