அணை கட்டத் துடிக்கும் ஆந்திரா!!
சென்னை:பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவது உறுதி. அதை யாராலும் தடுக்க முடியாது என்று ஆந்திர முதல்வர் ராஜேசகர ரெட்டி திட்டவட்டமாக கூறியுள்ளதால், தமிழகத்தின் வட பகுதியில் உள்ள ஐந்து மாவட்டங்களின் குடிநீர்த் தேவை பெரும் கேள்விக்குறியாகவுள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கணேசபுரம் பகுதியில் உள்ள பாலாற்றின் குறுக்கே அணை கட்ட ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. இந்த அணையைக் கட்டினால் தமிழகத்தின் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்ங்களில் பெரும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, இந்தத் திட்டத்தை ஆந்திர அரசு கைவிட வேண்டும் என தமிழகத்தின் அனைத்துக் கட்சிளும், தமிழக அரசும் தொடர்ந்து கோரி வருகின்றன. ஆனால் இதைக கண்டுகொள்ளாத ஆந்திர அரசு அணை கட்டும் முடிவை இறுதியாக்கியுள்ளது.
நேற்று ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஆந்திர முதல்வர் ராஜேசகர ரெட்டி, இந்த அணை கட்டுவது ஆந்திர அரசின் உரிமை. இதை யாரும் எதிர்க்க முடியாது, தடுக்கவும் முடியாது. ஆந்திர அரசு எல்லைக்குள்தான் இந்த அணை அமைகிறது என்றார்.
மேலும் மே மாதம் அணைக்கான அடிக்கல்லையும் ராஜேசகர ரெட்டி நாட்டவுள்ளார். முதல் கட்டமாக அணை கட்டும் பணிக்கு ரூ. 55 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ. 250 கோடி செலவில் இந்த அணை கட்டப்படவுள்ளது.
அணை கட்டுவற்கான டெண்டர் வருகிற 26ம் தேதி வெளியிடப்படவுள்ளது.
ஆந்திர அரசு அணை கட்டும் விவகாரத்தில் படு வேகமாக இருப்பதால் தமிழகத்தின் ஐந்து வட மாவட்ட மக்களும் பெரும் பீதிக்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக சென்னை தவிர்த்த மற்ற மாவட்டங்களின் விவசாயிகள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.