சார்ஜ் மெமோ-அரசு மீது பிரேமகுமார் பகீர் புகார்
சென்னை:சங்கராச்சாரியாரை கைது செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய எஸ்பி பிரேம்குமார் தன் மீது அரசு பதிவு செய்துள்ள சார்ஜ் மெமோவைத் தொடர்ந்து அனைத்து நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது,
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் எனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதற்காக பரிசோதனைக்கு சென்னை அரசு மருத்துவமனைக்கு சென்று இருந்தேன். அங்கு சங்கரராமன் கொலை வழக்கில் அப்ரூவராக மாறிய ரவிசுப்ரமணியம் சிகிச்சைக்காக வந்திருந்தார். அப்போது அவருடன் நான் பேசியதாக கூறிவும் மேலும் சில குற்றச்சாட்டுகளை என் மீது பதிவு செய்தும் என்னை பணி நீக்கம் செய்தனர். பின்னர் சார்ஜ் மெமோவும் பதிவு செய்யப்பட்டது.
அதில் அனுமதியின்றி ரவிசுப்ரமணியத்தை சந்தித்து பேசியுள்ளீர்கள், நீதிமன்ற காவலில் இருக்கும் அவரை நீங்கள் தப்பிச் செல்லுமாறு கூறியுள்ளீர்கள். அரசுக்கு எதிராக செயல்பட்டுள்ளீர்கள். மேலும் கடமையில் இருந்து தவறிவிட்டீர்கள் என அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டை நான் மறுத்தேன். என் மீது மெமோவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கான ஆவணங்களின் நகல்களையும், ரவிசுப்ரமணியத்தின் வாக்குமூலத்தின் அறிக்கையையும் கேட்டேன். ஆனால் அதற்கு எந்த பதிலும் இல்லை.
விசாரணை அதிகாரியாக உமாகணபதி சாஸ்திரி நியமிக்கப்பட்டார். அவரது விசாரணையில் கலந்து கொண்டேன். சான்றளிக்கப்பட்ட ஆவணங்களை தர மறுத்து விட்டனர். ஆனால் நகல்கள் அளிக்கப்பட்டன. அசல் ஆவணங்களை பார்க்க அனுமதி கேட்டேன். ஆனால் அதற்கு அனுமதி மறுத்து விட்டனர்.
அசல் ஆவணங்களுக்கும், நகலுக்கும் இடையே வேறுபாடுகள் உள்ளது. ஆவணங்கள் திருத்தப்பட்டுள்ளன. எனவே என் மீது பதிவு செய்துள்ள சார்ஜ் மெமோவில் குறிப்பிடப்பட்ட ஆவணங்களை தடய அறியவியல் துறைக்கு அனுப்ப உத்தரவிட வேண்டும்.
சார்ஜ் மெமோவைத் தொடர்ந்து அனைத்து நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.