ஆசிரியர் பயிற்சி மாணவி தீக்குளித்து தற்கொலை
சின்னசேலம்:
சின்னசேலம் அருகே ஆசிரியர் பயிற்சி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்துக் கொண்டார். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் கச்சிராப்பாளையத்தை சேர்ந்தவர் நதியா (19). சின்னசேலம் அருகே உள்ள ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படித்து வந்தார்.
கல்வி கட்டணம் செலுத்தாததால் பள்ளி நிர்வாகி, மற்ற மாணவிகள் முன்பு நதியாவைத் திட்டியுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த நதியா வீட்டிற்கு சென்று மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டு இறந்தார்.
இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் ஆத்திரத்தை உண்டாக்கியது. நேற்று காலை அந்த பள்ளி வேன் மாணவிகளை ஏற்றி செல்ல வந்தபோது, வேனை மறித்து நிறுத்தி போராட்டத்தில் குதித்தனர்.
தகவல் அறிந்த கச்சிராப்பாளையம் போலீஸார் விரைந்து வந்து மக்களை சமாதானப்படுத்தினர். ஆனாலும் சமாதானம் அடையாத பொதுமக்கள் அன்று மாலை, பேருந்து நிலையம் அருகில் கிராம மக்கள் 1000 பேருடன் சேர்ந்து சாலை மறியலில் குதித்தனர்.
இதனால் சுமார் 3 மணிநேரம் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோட்டாட்சியர் கோவிந்தன் மற்றும் தாசில்தார் கிருஷ்ணசாமி ஆகியோர் சாலை மறியலில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மக்கள் கலைந்து சென்றனர்.