கிருஷ்ணசாமியை முற்றுகையிட்ட மகளிர் காங்.
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியை முற்றுகையிட்டு மகளிர் காங்கிரஸைச் சேர்ந்த பெண்கள் போரட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சத்தியமூர்த்தி பவனில் நடந்த அம்பேத்கார் பிறந்த நாள் விழாவின்போது பெரும் மோதல் ஏற்பட்டது. இதில் மகளிர் காங்கிரஸைச் சேர்ந்தவரும், மாநில மகளிர் ஆணைய உறுப்பினருமான ஆலிஸ் மனோகரியின் ஜாக்கெட், சேலை கிழிக்கப்பட்டது.
எம்.எல்.ஏ ஜெயக்குமாரின் தூண்டுதலின் பேரில்தான் தான் தாக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டதாக ஆலிஸ் மனோகரி புகார் கூறினார். இதுதொடர்பாக காவல்துறை ஆணையரிடமும் அவர் புகார் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று சத்தியமூர்த்தி பவனில் ஆலிஸ் மனோகரி தலைமையில் 100 பேர் கூடி திடீர் உண்ணாவிரதம் இருந்தனர். உண்ணாவிரதம் இருந்த ஆலிஸ் கூறுகையில், எம்.எல்.ஏ. ஜெயகுமார், அவரது ஆதரவாளர்கள் செங்கை செல்லப்பா, ஏழுமலை, நாகராஜ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அது வரை போராட்டம தொடரும் என்றார்.
அப்போது வெளியே வந்த கிருஷ்ணசாமி உண்ணாவிரதம் இருந்தவர்களிடம் சென்று, நான் பார்த்துக் கொள்கிறேன், போராட்டத்தை கைவிடுங்கள் என்றார்.
ஆனால் போராட்டத்தைக் கவிட மறுத்த பெண்கள், கிருஷ்ணசாமியையும் முற்றுகையிட்டு போராட்டத்தில் குதித்தனர்.
பின்னர் ஆலிஸ் மனோகரியையும், முக்கிய நிர்வாகிகளையும் உள்ளே அழைத்து கிருஷ்ணசாமி பேச்சுவார்த்தை நடத்தினார்.