வங்கதேசத்தை வீழ்த்தி மே.இ தீவுகள் ஆறுதல் வெற்றி
பிரிட்ஜ்டவுன்:
உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து வெளியேறியுள்ள மேற்கு இந்தியத் தீவுகள் அணி, நேற்று நடந்த சூப்பர் 8 போட்டியில் வங்கதேசத்தை 99 ரன்களில் வீழ்த்தியது.
உலகக் கோப்பைப் போட்டியின் லீக் பிரிவில் சிறப்பாக ஆடிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி சூப்பர் எட்டு சுற்றில் படு சொதப்பலாக ஆடி போட்டியிலிருந்தே வெளியேறி விட்டது.
இதுவரை மோதிய போட்டிகளில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி தோல்வியுற்றிருந்தது. ஒரு வெற்றியைக் கூட அது பெறவில்லை. இந்த நிலையில் நேற்று நடந்த போட்டியில் ஆறுதல் வெற்றியைப் பெற்றது.
முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் ஆரம்பம் மோசமாக இருந்தது. கெய்லும், ஸ்மித்தும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் ரசிகர்கள் விரக்தி அடைந்தனர்.
ஆனால் சந்தர்பாலும், சாமுவேல்ஸும் இணைந்து அணியை நிலைப்படுத்தினர். சந்தர்பால் சிறப்பாக ஆடி அரை சதம் அடித்தார். சாமுவேல்ஸ் 31 ரன்களை எடுத்தார்.
ஆனால் பின்னர் வந்த ராம்நரேஷ் சர்வான்தான் அணியின் ஸ்கோரை உயர்த்த வெகுவாக உதவினார். சிறப்பாக ஆடிய அவர் ஆட்டமிழக்காமல் 91 ரன்களைக் குவித்தார்.
கேப்டன் பிரையன் லாராவும் சிறப்பாக ஆடி 33 ரன்களை சேர்த்தார். இறுதியில், 50 ஓவர்கள் முடிவில் 5விக்கெட்டுக்களை இழந்து 230 ரன்களை சேர்த்தது மேற்கு இந்தியத் தீவுகள் அணி.
பின்னர் களம் இறங்கிய வங்கதேசம், மேற்கு இந்திய அணியின் வேகப் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சுருண்டு போனது.
முஷாபிகூர் ரஹீம் (38), மொர்டசா (37) ஆகியோர் மட்டுமே சொல்லிக் கொள்ளும்படியான ரன்களை எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர். 43.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து வங்கதேசம் 131 ரன்களில் ஆட்டமிழந்தது.
இந்த போட்டியால் இரு அணிகளுக்கும் எந்த பலனும் இல்லை என்ற போதிலும், மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு ஆறுதல் வெற்றியாக அமைந்தது. இன்னும் இங்கிலாந்துடன் மட்டும் மேற்கு இந்தியத் தீவுகள் மோத வேண்டியுள்ளது.