குடும்பத்தினரிடம் லோகநாதன் உடல் ஒப்படைப்புதாயார் கதறி அழுகை - நாளை அடக்கம்
பிளாக்ஸ்பர்க்:விர்ஜீனியா டெக் பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட தமிழக பேராசிரியர் லோகநாதனின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தென் கொரிய மாணவரின் வெறிச் செயலுக்குப் பலியான லோகநாதனின் உடல் அவரது விருப்பப்படி பல்கலைக்கழக வளாகத்திலேயே அடக்கம் செய்யப்படவுள்ளது.இதையடுத்து லோகநாதனின் பெற்றோர் உள்ளிட்ட 9 பேர் அடங்கிய குடும்பத்தினர் சென்னையிலிருந்து விமானம் மூலம் வாஷிங்டன் சென்றனர். அங்கு அவர்களை இந்தியத் தூதரக அதிகாரிகள் நேரில் வந்து அழைத்துச் சென்றனர்.
பின்னர் பல்கலைக்கழகமே ஏற்பாடு செய்திருந்த தனி விமானம் மூலம் அனைவரும் பிளாக்ஸ்பர்க் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கிருந்து அனைவரும் விர்ஜீனியா டெக் பல்கலைக்கழகத்திற்கு சென்றனர்.
அங்கு லோகநாதனின் உடல் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உடலைப் பார்த்ததும், வீல் சேரில் அமர்ந்தபடி வந்த தாயார் கண்ணம்மாள் கண்ணீர் விட்டுக் கதறி அழுதார். லோகநாதனின் தந்தை, சகோதரர்கள் உள்ளிட்டோரும் கதறினர்.
லோகநாதனின் உடல் நாளை பல்கலைக்கழக வளாகத்தில் அடக்கம் செய்யப்படுகிறது.