வங்கதேச டூர்: சச்சின், கங்குலிக்கு ஓய்வுஅகர்கர், பதான், ஹர்பஜன் நீக்கம்
மும்பை:வங்கதேசம் செல்லும் இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டெண்டுல்கர், கங்குலி ஆகியோருக்கு ஒரு நாள் போட்டிகளில் மட்டும் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. ஷேவாக்கு டெஸ்ட் போட்டியில் இடம் அளிக்கப்படவில்லை. இர்பான் பதான், அஜீத் அகர்கர், ஹர்பஜன் சிங் ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் படு மோசமாக தோல்வியுற்று நாடு திரும்பிய இந்திய அணியில் களை எடுக்க வேண்டும் என்று நாடு முழுவதும் கோரிக்கை எழுந்தது. சச்சின் உள்ளிட்ட மூத்த வீரர்கள் மீதும் கண்டனங்கள் கிளம்பின.
இந்த நிலையில், நேற்று மும்பையில், இந்திய கிரிக்கெட் வாரிய தேர்வுக் குழுக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் வங்கதேச பயணத்திற்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது. ராகுல் டிராவிட் மீண்டும் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் துணை கேப்டனாக யாரும் தேர்வு செய்யப்படவில்லை.
ஒரு நாள் போட்டிகளுக்கான அணியில் சச்சின், கங்குலி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதாக தேர்வுக்குழுத் தலைவர் வெங்சர்க்கார் தெரிவித்துள்ளார். டெஸ்ட் தொடரில் இருவரும் இடம் பெற்றுள்ளனர்.
அதேபோல சுத்தமாக பார்மில் இல்லாத வீரேந்திர ஷேவாக்குக்கு ஒரு நாள் தொடரில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் டெஸ்ட் அணியில் இடம் தரப்படவில்லை. ஷேவாக்கை சேர்க்க தேர்வுக்குழு விரும்பவில்லை. ஆனால், கேப்டன் டிராவிட் வலியுறுத்தலின் பேரிலேயே அவருக்கு ஒரு நாள் போட்டியில் இடம் அளிக்கப்பட்டதாக வெங்சர்க்கார் கூறியுள்ளார்.
அஜீத் அகர்கர், ஹர்பஜன் சிங், இர்பான் பதான் ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தவிர கௌதம் கம்பீர், ராபின் உத்தப்பா, தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட பழைய முகங்கள் மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளனர். புதிதாக சேர்ந்துள்ளவர்கள் மனோஜ் திவாரி, ராஜேஷ் பவார் ஆகிய இருவர் மட்டுமே. ஆர்.பி.சிங், பையூஷ் சாவ்லா, வி.ஆர்.வி.சிங், தினேஷ் மோங்கியா ஆகியோருக்கும் அணியில் மீண்டும் இடம் கிடைத்துள்ளது.
இவர்களில் தினேஷ் மோங்கியா, வி.ஆர்.வி.சிங் ஆகியோர் பார்மில் இல்லாத வீரர்கள். இருவரும் சரியில்லை என்று கூறித்தான் உலகக் கோப்பை போட்டிக்கான அணியில் சேர்க்கப்படவில்லை. இந்த நிலையில் இருவரும் விளையாடத் தகுதி பெற்று விட்டனர் என்று கூறி அவர்களுக்கு மீண்டும் இடம் கொடுத்துள்ளனர்.
அதேபோல, விக்கெட் கீப்பர் டோணியை தூக்கியாக வேண்டும் என நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் கொந்தளித்தனர். ஆனால் அவருக்கு ஒரு நாள் போட்டியிலும், டெஸ்ட் போட்டியிலும் பத்திரமாக இடம் கொடுத்துள்ளனர்.
மொத்தத்தில் இந்திய ரசிகர்களைத் திருப்திப்படுத்த சில மூத்த வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. கேப்டனைத் திருப்திப்படுத்த பார்மில் இல்லாத ஷேவாக்குக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. கிரிக்கெட் வாரியத்தில் உள்ள சிலரை திருப்திப்படுத்த சில வீரர்களுக்கு (பார்மில் இல்லாத போதிலும்) மீண்டும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
ஒரு நாள் தொடருக்கான அணி:
ராகுல் டிராவிட் (கேப்டன்), வீரேந்தர் ஷேவாக், யுவராஜ் சிங், கெளதம் காம்பீர், டோணி, ராபின் உத்தப்பா, தினேஷ் கார்த்திக், ஸ்ரீசாந்த், மனோஜ் திவாரி, முனாப் படேல், ஜாகிர் கான், பையூஷ் சாவ்லா, ஆர்.பி.சிங், ரமேஷ் பவார், தினேஷ் மோங்கியா.
டெஸ்ட் அணி:
ராகுல் டிராவிட் (கேப்டன்), சச்சின் டெண்டுல்கர், செளரவ் கங்குலி, யுவராஜ் சிங், வாசிம் ஜாபர், வி.வி.எஸ்.லட்சுமன், தினேஷ் கார்த்திக், டோணி, அணில் கும்ப்ளே, ஜாகிர் கான், வி.ஆர்.வி.சிங், முனாப் படேல், ஸ்ரீசாந்த், ரமேஷ் பவார், ராஜேஷ் பவார்.