வெடிபொருள் கடத்தல் என பொய் புகார்:மீனவர் தலைவர் உள்பட 7 பேர் கைது
காயல்பட்டனம் (தூத்துக்குடி):தங்களது உத்தரவை மீறி கடலில் மீன் பிடிக்க வந்த பக்கத்து கிராம மீனவர்களின் படகில் வெடிபொருட்களை வைத்து விட்டு, இலங்கைக்கு வெடிபொருட்களைக் கடத்துவதாக கூறி பொய்யான புகார் கொடுத்த மீனவர் கிராம தலைவர் உள்பட 7 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டனம் அருகே உள்ளது கொம்புத்துறை மீனவர் கிராமம். இந்தக் கிராமத்தின் ஊர் கமிட்டி ஆலோசகர் ஜான்சன் மரியநாயகன் என்பவர் போலீஸைத் தொடர்பு கொண்டு, கொம்புத்துறை கடற்கரையில் சில வெளிநபர்கள் நடமாட்டம் உள்ளது, ஆயுதங்கள் கடத்துவது போலத் தெரிவதாக கூறியுள்ளார்.
இதையடுத்து போலீஸார் அங்கு விரைந்தனர். அங்கு கடலுக்குள் செல்ல படகைத் தயார் செய்து கொண்டிருந்த ததேயுஸ், ஜெரோன் மற்றும் வினோத் ஆகியோரை தடுத்து நிறுத்தி, படகை சோதனையிட்டனர்.
படகில் இருந்த ஒரு பெட்டியை உடைத்துப் பார்த்தபோது அதில், இரும்பு பால்ரஸ் குண்டுகள், வெடிமருந்துப் ெபாருட்கள், பிளாஸ்டிக் குழாய்கள், கண்ணாடித் துண்டுகள் உள்ளிட்டவை இருந்தன.
ஆனால் இவை எப்படி எங்களது பெட்டிக்குள் வந்தன என்று தெரியவில்லை என மூன்று மீனவர்கள் போலீஸாரிடம் தெரிவித்தனர். பின்னர் அவர்களை காவல் நிலையம் கொண்டு சென்று போலீஸார் விசாரித்தனர். அதில் திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது.
அதாவது கொம்புத்துறை கிராம எல்லைக்குட்பட்ட கடல் பகுதியில் வேறு கிராமத்தினர் யாரும் மீன்பிடிக்கக் கூடாது என கொம்புத்துறை ஊர் கமிட்டி தடை போட்டுள்ளதாம். ஆனால் அதை மீறி மேற்கண்ட மூன்று மீனவர்களும் மீன் பிடிக்க வந்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த ஊர் கமிட்டியினர் அவர்களை போலீஸாரிடம் மாட்ட வைக்க, அவர்களே வெடிபொருட்களை எடுத்து வந்து அந்தப் படகில் வைத்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து கொம்புத்துறை ஊர் கமிட்டி தலைவர் ஜோசப் ராஜ், துணைத் தலைவர் ஜெரோமியஸ், பொருளாளர் ஜெரால்டு, ஆலோசகர்கள் ஜான்சன் மரியநாயகம், ஜோசப் அந்தோணி உள்ளிட்ட 7 பேரைக் கைது செய்தனர்.