ஐஐஎம் மாணவர் சேர்க்கை நிறுத்தி வைப்பு
டெல்லி:பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும் வரை உயர் கல்விக்கான மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைப்பதென ஐஐஎம் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உயர் கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. ஆனால் இந்த சட்டத்திற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இதையடுத்து இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு கிடைக்காது என்ற சூழ்நிலை உருவாகியது. மேலும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்காக நீண்ட காலம் காத்திருக்க முடியாது என்று ஐஐடி மற்றும் ஐஐஎம் நிறுவனங்களின் இயக்குநர்கள் கூறினர்.
இந்த நிலையில், நேற்று டெல்லியில் ஐஐஎம் நிறுவனங்களின் இயக்குநர்கள் கூட்டம் நடப்பதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் இந்தக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் வருகிற 23ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதால் அதுவரை மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைக்க வேண்டும் என நாட்டில் உள்ள ஆறு ஐஐஎம் நிறுவனங்ளுக்கும் நேற்று மத்திய மனித வளத்துறை உத்தரவிட்டிருந்தது. இதை ஏற்றே இயக்குநர்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
பின்னர் இதுகுறித்து மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜூன் சிங் கூறுகையில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது மாணவர் சேர்க்கையை மேற்கொள்வது நியாயமற்ற ஒன்று. எனவே வழக்கின் தீர்ப்பு வரும் வரை காத்திருப்பதே சரியான செயல்.
மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் ஐஐஎம் போன்ற உயர் கல்வி நிறுவனங்கள் தன்னிச்சையாக செயல்பட முடியாது என்றார் அர்ஜூன் சிங்.
இருப்பினும் 23ம் தேதிக்குப் பிறகும் சிக்கல் நீடித்தால் தாங்கள் தன்னிச்சையாக செயல்பட வேண்டி வரும் என்று ஐஐஎம் நிறுவனங்களின் இயக்குநர்கள் மத்திய அரசை எச்சரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.