சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு நக்ஸல்கள் குறி
டெல்லி:சிறப்புப் பொருளாதார மண்டலங்களையும், தொழிற்சாலைகளையும் தகர்க்க நக்ஸலைட்டுகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆந்திரா, ஜார்கண்ட், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் நக்ஸலைட்டுகளின் வன்முறை அதிகரித்து வருகிறது. பாதுகாப்பு படையினர் மீதும் இவர்களது தாக்குதல் தொடர்ந்து வருகிறது.
இந் நிலையில் இந்தியா உருவாக்கி வரும் பொருளாதார மண்டலங்களுக்காக ஏராளமானோர் தங்கள் நிலங்களை இழந்து வருவதை தடுக்கும் வகையில் அந்த மண்டலங்களைத் தாக்க நக்ஸல்கள் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறிப்பாக விவசாய நிலப் பகுதிகளில் அமைக்கப்படும் பொருளாதார மண்டலங்களை முதலில் தாக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இந்தத் திட்டம் குறித்து மாநில அரசுகளை மத்திய உள்துறை எச்சரித்துள்ளது. காவல்துறைகளுக்கு ஐ.பி. எச்சரிக்கை அனுப்பியுள்ளது.
சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்கும்படி வலியுறுத்தியுள்ளது.
மேலும் சிறப்பு பொருளாதார மண்டலங்களில் தொழிற்சாலைகளை நிறுவும் தொழிலதிபர்களையும் நக்ஸல்கள் குறி வைத்துள்ளதாகக் கருதப்படுகிறது. இதற்காக நிலத்தை இழந்தவர்களை ஒன்று திரட்டும் நடவடிக்கைகளில் நக்ஸலைட்டுகள் ஈடுபட்டுள்ளனர்.
இதை தடுக்க வரும் 26ம் தேதி டெல்லியில் மாநில போலீஸ் டிஜிபிக்கள் கூட்டம் நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.
இந் நிலையில் நக்ஸல்கள் நடமாட்டம் மிக்க ஆந்திர எல்லை மாவட்டங்களில் தமிழக போலீஸார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.