பாலாற்றில் கை வைத்தால்... திருப்பதியைகேட்போம்: பாமக கடும் எச்சரிக்கை
வேலூர்:பாலாற்றில் அணை கட்டும் முடிவை ஆந்திர அரசு கைவிடாவிட்டால் திருப்பதியை மீட்க தமிழக மக்கள் போராட்டத்தில் குதிக்க நேரிடும் என்று பாமக தலைவர் ஜி.கே.மணி கூறினார்.
வேலூர் மாவட்டம் ஆம்பூரில், செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பாலாற்றின் குறுக்கே அணை கட்டவுள்ள ஆந்திர அரசின் செயல் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகி விட்டது. 26ம் தேதி அணை கட்ட ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படவுள்ளதாகவும், பணிகள் தொடங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலாறு ஏற்கனவே வறண்டு போய்க் கிடக்கிறது. மழை வந்தால்தான் ஏதோ ஓரளவாவது தண்ணீர் வரும். இந்த நிலையில் அணையைக் கட்டி விட்டல் சுத்தமாக தண்ணீரே வராமல் போய் விடும்.
எனவே தமிழக அரசு எக்காரணம் கொண்டும், பாலாற்றின் குறுக்கே அணை கட்ட ஆந்திர அரசை அனுமதிக்கக் கூடாது. பாலாற்றில் தமிழகத்தின் உரிமையை நிலைநிறுத்த வேண்டும்.
தமிழக மக்களின் கோரிக்கையையும் மீறி ஆந்திர அரசு அணை கட்டினால் தமிழக மக்கள் பெரும் கிளர்ச்சியில் ஈடுபடுவார்கள். இனியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். பாலாற்றில் ஆந்திர அரசு உரிமை கொண்டாடினால் திருப்பதியை மீட்க தமிழக மக்கள் போராட்டத்தில் குதிப்பார்கள் என்றார் மணி.