பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
பாலசோர்(ஒரிசா):ரஷ்யாவுடன் இணைந்து இந்தியா தயாரித்துள்ள அதி நவீன பிரமோஸ் ஏவகணை இன்று காலை ஒரிசா மாநிலம் சந்திப்பூரில் உள்ள ஏவுகணை ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக ஏவி பரிசோதிக்கப்பட்டது.
இந்தியாவும், ரஷியாவும் இணைந்து தயாரித்துள்ள அதி நவீன ஏவுகணை பிரமோஸ். ராணுவத்திற்காக தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஏவுகணை 290 கிலோமீட்டர் தூரத்திற்குப் பாய்ந்து சென்று இலக்கைத் தாக்கும் தன்மை கொண்டது.
200 கிலோ எடை கொண்ட குண்டுகளை சுமந்து செல்லக் கூடிய வகையில், இந்த ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்று காலை சந்திப்பூரில் உள்ள ஏவுதளத்திலிருந்து முற்பகல் 11.20 மணிக்கு பிரமோஸ் வெற்றிகரமாக ஏவப்பட்டது. குறிப்பிட்ட இலக்கை அது சரியாகத் தாக்கி அழித்தது.
இந்த சோதனை வெற்றிகரமாக இருந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தரையிலிருந்து ஏவப்படக் கூடிய பிரமோஸ் ஏவுகணைகளை சிறிய மாற்றத்துடன் கப்பல்களிலிருந்தும், நீர்மூழ்கி கப்பல்களிலிருந்தும் ஏவ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
கப்பலிலிருந்து பிரமோஸை செலுத்தும்போது அது ஒலியை விட இரு மடங்கு வேகத்துடன் செல்லும்.
கடைசியாக கடந்த பிப்ரவரி 4ம் தேதி பிரமோஸ் ஏவி சோதிக்கப்பட்டது. தற்போது நடந்திருப்பது 10வது சோதனை ஆகும்.
முழுமையான பரிசோதனைகளுக்குப் பின்னர் இந்தியா மற்றும் ரஷியா ஆகிய இரு நாடுகளின் ராணுவத்திலும் பிரமோஸ் சேர்க்கப்படவுள்ளது.