பிரேம்குமார் மீது நடவடிக்கை எடுக்க தடை
சென்னை:சங்கரராமன் கொலை வழக்கில் அப்ரூவர் ரவி சுப்ரமணியத்தை மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் எஸ்.பி.பிரேம்குமார் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
சங்கரராமன் கொலை வழக்கில் கூலிப்படைத் தலைவன் அப்புவை ஜெயேந்திரருக்கு அறிமுகப்படுத்தி வைத்ததாக கைது செய்யப்பட்டு பின்னர் அப்ரூவராக மாறியவர் ரவிசுப்ரமணியம்.
இவர் சென்னை அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டபோது, அவரை பிரேம்குமார் சந்தித்து தப்பி ஓடும் படியும், இல்லாவிட்டால் விபரீத விளைவுகள் ஏற்படும் என மிரட்டியதாகவும் ரவிசுப்ரமணியம் கொடுத்த புகாரின் பேரில் பிரேம்குமார் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்தப் புகாரைத் தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார் பிரேம்குமார். இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் பிரேம்குமார். அதில், இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் தாக்கல் செய்த அறிக்கையில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எனவே இவற்றை தடயவியல் சோதனைக்கு அனுப்ப வேண்டும். அதுவரை தன் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பால் வசந்தகுமார், ஜூன் 5ம் தேதிக்கு வழக்கை தள்ளி வைத்தார். மேலும் அதுவரை பிரேம்குமார் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கவும் தடை விதித்தார்.
ஏற்கனவே மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்த நல்லகாமன் என்ற முன்னாள் ராணுவ வீரரை தெருவில் சங்கிலி கட்டி இழுத்துச் சென்று அடித்து உதைத்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பிரேம்குமாருக்கு, ஏன் உங்களை டிஸ்மிஸ் செய்யக் கூடாது என்று கேட்டு தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியிருப்பது நினைவிருக்கலாம்.