சென்னையைக் கலக்கிய விமானப் படையின் சாகசம்
சென்னை:இந்திய விமானப் படை நிகழ்த்திய சாகசங்களை சென்னை மக்கள் நேற்று உற்சாகமாக கண்டுகளித்தனர்.
விமானப்படையின் 75வது ஆண்டு விழாவையொட்டி சென்னை மெரீனா கடற்கரையில், நேற்று மாலை சுமார் ஒரு மணி நேரம் சாகச நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பல லட்சம் மக்கள் இந்த சாகசங்களைக் கண்டு மெய் மறந்து போயினர்.
மாலை 5 மணிக்கு சாகச நிகழ்ச்சி தொடங்கியது. முதலில் பெங்களூரிலிருந்து பறந்து வந்த ஜாகுவார் விமானம் சாகசம் நிகழ்த்தி விட்டு மீண்டும் பெங்களூருக்கே திரும்பிச் சென்றது.
பின்னர் இந்துஸ்தான் ஏரேநாட்டிக்ஸ் நிறுவனத்தின் எச்.பி.டி 32 ரக விமானங்கள் ஒரு சேர அணிவகுத்துப் பறந்து கூட்டத்தினரை மகிழ்ச்சிப்படுத்தின.
அதன் பின்னர் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த சூரிய கிரண் சாகச நிகழ்ச்சி நடந்தது. 9 விமானங்கள் மூவண்ண புகையைக் கக்கியபடி வானில் பல சாகசங்களை நடத்தின.
பறவை போல பறப்பது, குறுக்கும் நெடுக்குமாக வேகமாக செல்வது என பல சாகசங்களை செய்து காட்டிய சூரிய கிரண் சாகம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. எதிரும் புதிருமாக அதிக வேகமாக வந்து அப்படியே விலகிச் சென்றபோது பார்வையாளர்கள் திரில்லில் உறைந்தனர்.
இதை விட உதயசூரியன் போல சூரிய கிரண் விமானங்ள் விரிந்து பறந்து வானில் சாகசம் செய்தபோது பார்வையாளர்கள் மத்தியில் காணப்பட்ட உடன் பிறப்புகள் உற்சாகத்தின் உச்சிக்கேப் போய் விட்டனர்.
இதேபோல தேங்க்ஸ் தமிழ்நாடு என்பதைக் குறிக்கும் வகையில் டி வடிவில் விமானங்கள் பறந்து பார்வையாளர்களிடமிருந்து நன்றி கரகோஷத்தைப் பெற்றன.
பின்னர் சாரங்க் ஹெலிகாப்டர் குழுவினர் நிகழ்த்திய சாகசமும் அனைவரையும் குதூகலப்படுத்தியது. பிறகு பாராசூட் வீரர்கள் தங்கள் பங்க்குக்கு விண்ணிலிருந்து குதித்து பார்வையாளர்களை கவர்ந்தனர்.
இறுதியில் விமானப்படையினரின் சிம்பொனி இசை நகிழ்ச்சியும் நடந்தது. இந்த நிகழ்ச்சிகளை கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் பார்த்திருப்பார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.
நிழ்ச்சிகளை பார்வையாளர்கள் சரியாகப் பார்க்கும் வகையில், பல இடங்களில் ராட்சத திரைகளும் வைக்கப்பட்டு ஒளிபரப்பப்பட்டன.
விமானப்படை சாகச நிழ்ச்சிகளைப் பார்ப்பதற்காக சென்னை மட்டுமல்லாது அக்கம் பக்கத்து மாவட்டங்களிலிருந்தும் பெரும் திரளான மக்கள் கூட்டம் கூடி விட்டதால் மெரீனா கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகள் அனைத்திலும் மக்கள் வெள்ளமாக காணப்பட்டது.
பிற்பகல் 1 மணியிலிருந்தே மக்கள் மெரீனாவில் கூடத் தொடங்கி விட்டனர். இந்த நிகழ்ச்சிக்கு வந்து செல்லும் மக்களின் வசதிக்காக ஏராளமான சிறப்புப் பேருந்துகள் மற்றும் மின்சார ரயில்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆளுநர் பர்னாலா, மேயர் மா.சுப்ரமணியன், தலைமைச் செயலாளர் திரிபாதி, டிஜிபி முகர்ஜி, காவல் ஆணையர் லத்திகா சரண் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியைப் பார்வையிட்டனர்.
இதேபோன்ற சாகச நிகழ்ச்சியை மதுரையிலும் நடத்த விமானப்படை முடிவு செய்துள்ளது. மதுரை விரகனூர் அருகே இந்த சாகச நிகழ்ச்சியை நடத்த விமானப்படை திட்டமிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மதுரை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.