பெரியார் சிலை உடைப்பு-கருணாநிதி கண்டனம்
திருவாரூர்:திருவாரூரில் பெரியார் சிலையின் தலை துண்டிக்கப்பட்ட வழக்கில் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பஸ் நிலையம் அருகே இருந்த பெரியாரின் சிலையை கடந்த சில தினங்களுக்கு முன் சில விஷமிகள் சேதப்படுத்தினர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு முத்துப்பேட்டை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது முத்துப்பேட்டை ரயில்வே நிலையத்தில் சந்தேகப்படும்படி 2 வாலிபர்கள் இருந்தனர். அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில் அவர்கள் பெயர் மனோகரன் (27), ஆலங்காடு மீரா உசேன் (26) என தெரியவந்தது.
மேலும் முத்துப்பேட்டையில் பெரியார் சிலையை உடைத்ததும் இவர்கள் தான் என தெரியவந்தது. போலீஸ் விசாரணையில் அவர்கள் கூறியாதவது,
எங்களுக்கும் திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் கருப்பு என்கிற முருகானந்தத்திற்கும் முன் விரோதம் இருந்தது. இதனால் அவர் எங்களை பல வழக்குகளில் சிக்க வைத்தார். இதனால் அவரை பழிவாங்க திட்டமிட்டு பெரியார் சிலையை உடைத்தோம்.
சிலை உடைப்பில் அவர் கைது செய்யப்படுவார் என நினைத்தோம். அதனால் தான் நாங்கள் சிலையை உடைத்தோம் என அவர்கள் கூறினார்கள்.
இதையடுத்து இருவரையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.
திருவாரூர் மாவட்டத்தில் பெரியார் சிலை உடைக்கப்பட்ட விவகாரத்தையொட்டி இம்மாவட்டத்தில் உள்ள 32 பெரியார் சிலைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கருணாநிதி கண்டனம்:
முத்துபேட்டையில் பெரியார் சிலை உடைப்பு தொடர்பாக சட்டசபையில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதில் அதிமுக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் கேள்விகளுக்கு முதல்வர் கருணாநிதி பதிலளித்தார்.
அப்போது பேசிய அவர்,
திருவாரூர் முத்துபேட்டை பேருந்து நிலையத்திலுள்ள பெரியார் சிலையை சேதப்படுத்தியதற்கு மற்ற கட்சிகளின் கண்டத்தோடு ஆளும் கட்சியான திமுகவும் கண்டனம் தெரிவிக்கிறது.
பெரியார், நம் அனைவரையும் மனிதர்களாக மாற்றி, மனித உணர்வோடு செயல்படத்தூண்டி, மனிதர்களுக்குள் உள்ள ஆறாவது அறிவை பயன்படுத்த செய்து அதுதான் பகுத்தறிவு என உணர்த்தியவர்.
ஆனால் சிலர் ஐந்தறிவோடு அவருடைய சிலையை உடைத்திருப்பது நமக்கெல்லாம் வெட்கக் கேடான தலைகுனிய வேண்டிய செய்தி. அவருடைய சிலையை உடைப்பதற்கு என்ன காரணம், தனிப்பட்ட விரோதமா என்றால் இல்லை.
அவருடைய கொள்கைகள் தமிழகத்தில் பரவி, அனைவரும் தன்மானம் மிக்கவர்களாக மாறிவிட்டால் ஏதோ ஒரு கூட்டத்திற்கு ஆதிக்கம் அற்று போய்விடும் என்ற அச்சத்தின் காரணமாக இந்த காரியங்கள் தமிழகத்தில் நடக்கிறதாக நான் கருதுகிறேன்.
இதை அரசு அடக்கு முறையாலோ அல்லது சட்டங்களாலோ அகற்றிவிட முடியாது. இதற்கு தண்டனை கொடுத்தால் மட்டும் போதாது மனிதனை திருந்த வேண்டும். அவ்வாறு திருத்த நாம் அனைவரும் நம் கருத்து வேறுபாடு கடந்து ஒன்றுபட்டு உழைக்கவேண்டும்.
பெரியாருக்கு நேர்ந்திருக்கிற இந்த அவலநிலை தமிழனுக்க நேர்ந்திருக்கும் அவலமாக கருதினால் மட்டுமே இனி இத்தகைய முறைகள் தமிழகத்தில் எடுபடாமல், நுழையாமல் நம்முடைய பகுத்தறிவு கொள்கையை நாம் பாதுகாக்க முடியும்.இந்த கொள்கையை பாதுகாக்க, சாதி மதம், தீண்டாமை என அனைத்து அவலங்களையும் வேரறுக்க பெரியார் தான் அடையாள சின்னமாக இருக்கிறார்.
நாட்டில் எத்தனை தலைவர் தோன்றினாலும் ஒரு இயக்கமாகவே மாறிவிட்ட பெருமை பெரியாரையை சாரும். அத்தகைய பெரியாரை இவ்வாறு அவமானங்களுக்கு ஆளாக்குவது என்றால் நாம் இருந்தும் பயன் இல்லை.
இத்தகைய காரியங்களில் உணர்ச்சி வசப்பட்டு, பதிலுக்கு பதில் என செயல்பட்டால் அந்த விஷகிருமிகளுக்கு துணை போவது போலாகும். இதில் நிதானமாக சிந்தித்து செயல்படவேண்டும்.
நீங்கள் ஆத்திரபடவோ, உணர்ச்சி வசப்படவோ தேவையில்லை. உங்களுக்கும் அதே உணர்வு இந்த அரசுக்கும் உள்ளது. இத்தகைய தீய சக்திகள் இனி தலை எடுக்காமல் இருக்க என்ன செய்யவேண்டுமோ அதை இந்த அரசு செய்யும் என கூறினார்.