மூணாறு தேனிலவு கொலை-தந்தை பல்டி்
தொடுபுழா (கேரளா):பரபரப்பான மூணாறு தேனிலவுக் கொலையில் கணவரை ஆள் வைத்துக் கொன்றதாக கைது செய்யப்பட்ட வித்யாவின் தந்தை நீதிமன்றத்தில் பிழற் சாட்சியம் அளித்தார்.
சென்னை பம்மலைச் சேர்ந்தவர் வித்யா. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அனந்தராமன் என்பவருக்கும் திருமணம் நடந்தது. ஆனால் கல்யாணத்திற்கு முன்பே ஆட்டோ டிரைவர் ஆனந்த் என்பவருக்கும் இடையே காதல் இருந்தது.
கல்யாணத்திற்குப் பிறகு அது கள்ளக் காதலாக மாறியது. இந்த நிலையில் தேனிலவுக்காக வித்யாவும், அனந்தராமனும் மூணாறு சென்றனர். அங்கு வித்யாவின் திட்டப்படி ஆனந்த்தும்,அவரது நண்பர் அன்புராஜ் என்பவரும் சேர்ந்து அனந்தராமனைக் கொலை செய்தனர்.
இதுதொடர்பாக மூணாறைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரின் சமயோஜிதத்தால் 3 பேரும் பிடிபட்டனர். கைதான மூன்று பேர் மீதும் தொடுபுழா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு சாட்சிகள் விசாரணை தொடங்கியுள்ளது.
நேற்று வித்யாவின் தந்தை சந்தானம் சாட்சியம் அளித்தார். ஏற்கனவே போலீஸாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில், தனது வீட்டிலிருந்து வித்யா கைப்பட எழுதிய டைரி, வித்யாவின் கையெழுத்துக்கள் அடங்கிய நோட்டுக்களைக் கொடுத்ததாக கூறியிருந்தார் சந்தானம்.
ஆனால் நேற்று நீதிமன்றத்தில் அதை மறுத்து சாட்சியம் அளித்தார். அந்தக் கையெழுத்து வித்யாவுடையதா என்பதில் சந்தேகம் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இருப்பினும் ஆனந்த், அன்புராஜ் ஆகியோரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கச் சங்கிலி வித்யாவுடையதுதான் என்று அவர் ஒத்துக் கொண்டார்.
இதேபோல, ஆனந்த்தின் நண்பரான பாபு என்பவரும் நேற்று பிறழ் சாட்சியம் அளித்தார். இதையடுத்து வழக்கு விசாரணையை வருகிற 26ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
ஏற்கனவே அனந்தராமனின் நண்பர் ஒருவரும் (இவர்தான் தேனிலவு பயணத்துக்கான வாகனத்தை ஏற்பாடு செய்து தந்தவர்) வித்யாவுக்கு ஆதரவாக பல்டி அடித்து சாட்சியம் அளித்துள்ளதால் வழக்கின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.