நெய்வேலியிலும் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு
நெய்வேலி:தஞ்சை, திருவாரூரைத் தொடர்ந்து நெய்வேலியிலும் அர்ச்சகர்களின் பூணூல் அறுக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது.
தஞ்சையிலும், திருவாரூரிலும் அர்ச்சகர்களின் பூணூல் அறுக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்த சம்பவங்கள் தொடர்பாக தி.க.வைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நெய்வேலியிலும் பூணூல் அறுப்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. நெய்வேலியில் வில்லுடையான்பட்டு முருகன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் நேற்று பிற்பகல் 1 மணியளவில் ஒரு கும்பல் புகுந்தது.
அங்கிருந்த பூசாரி குருமூர்த்தியை சரமாரியாக அடித்த அக்கும்பல் அவர் அணிந்திருந்த பூணூலை அறுத்து எரிந்தனர். பின்னர் அவரது தலை குடுமியையும் கத்தரித்து எறிந்தனர்.
போகும்போது குருமூர்த்தி அணிந்திருந்த தங்கச் சங்கிலியையும் பறித்துக் கொண்டு தப்பினர். கோவிலில் இருந்த விநாயகர் சிலையும் உடைத்து சேதப்படுத்தப்பட்டது.
அதன் பின்னர் குருமூர்த்தியின் மகன் ஞானஸ்கந்தன் வீட்டுக்குச் சென்று ஞானஸ்கந்தன், அவரது மகன் கோபிநாத், அண்ணன் மகன் கணேசன் ஆகியோரது பூணூல்களையும் அறுத்து எரிந்தனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக விரைந்து வந்த போலீஸார் விசாரணை நடத்தி தி.கவைச் சேர்ந்த 10 பேரை வலை வீசி தேடி வருகிறார்கள்.