பாலாறு அணை- அடிக்கல் விழாவை திடீரென ஒத்திவைத்த ஆந்திரம்
ஹைதராபாத்:ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கணேசபுரம் என்ற இடத்தில் பாலாற்றின் குறுக்கே திட்டமிடப்பட்டுள்ள அணை கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவை திடீரென அம்மாநில அரசு ஒத்திவைத்துள்ளது.
தமிழத்தின் கடும் எதிர்ப்பையும் மீறி அணை கட்டும் திட்டத்தில் உறுதியாக இருந்து வரும் ஆந்திர அரசு வருகிற புதன்கிழமை அடிக்கல் நாட்டு விழாவுக்கு திட்டமிட்டிருந்தது.
ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்வார் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. அன்றே டெண்டர் விடவும் திட்டமிட்டிருந்தனர்.
இந்த நிலையில் இந்த விழா திடீரென மே மாதம் 5ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஒத்திவைப்புக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.
அதேசமயம், டெண்டர் விடுவது திட்டமிட்டபடி 26ம் தேதி நடைபெறவுள்ளாம். ரூ. 54 கோடி செலவில் இந்த அணை கட்டப்படவுள்ளது. ஆனால் அணையைக் கட்ட மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் பெற வேண்டும். ஆனால் இதுவரை சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கவில்லை.
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சராக இருப்பவர் திமுகவைச் சேர்ந்த ராஜா என்பது குறிப்பிடத்தக்கது.