முஸ்லீம் குழந்தைக்கு குருவாயூரில் துலாபாரம்!
குருவாயூர்:குருவாயூரில் உள்ள பிரபல கிருஷ்ணர் கோவிலில் முஸ்லீம் சமுதாயத்தைச் சேர்ந்த குழந்தைக்கு துலாபாரம் கொடுக்கப்பட்டது.
கிருஷ்ணர் கோவிலில் உள்ள துலாபாரத்தில், பலரும் நேர்த்திக் கடன் செலுத்தி தங்களது எடைக்கு எடை பொருட்களை காணிக்கையாக கொடுப்பார்கள். தங்கம் முதல் சாதாரண சர்க்கரை வரை பல்வேறு வகையான பொருட்களை துலாபாரமாக கொடுக்கலாம்.
இந்த நிலையில் முஸ்லீம் சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு குழந்தைக்கு துலாபாரம் கொடுக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் பத்தனம் திட்டாவைச் சேர்ந்த சாஜி என்பவரின் 6 மாத மகள் அலீசா. இவருக்கு எடைக்கு எடை துலாபாரம் கொடுப்பதாக சாஜி வேண்டிக் கொண்டிருந்தார்.
அதன்படி கிருஷ்ணர் கோவிலுக்கு வந்த சாஜி தம்பதியினர் தங்களது மகள் அலீசாவை தராசுத் தட்டில் உட்கார வைத்தனர். பின்னர் மற்றொரு தட்டில் அலீசாவின் எடைக்குத் தகுந்த அளவு சர்க்கரை இடப்பட்டது. பின்னர் வாழைப்பழங்களும் துலாபாரமாக வழங்கப்பட்டது.
பொதுவாக இந்து சமூகத்தினரே துலாபாரம் வழங்குவது வழக்கம். இந்த நிலையில் முஸ்லீம் குழந்தைக்கு துலாபாரம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.