அப்துல் கலாம் பிரான்ஸ் பயணம்
டெல்லிகுடியரசுத் தலைவர் அப்துல் கலாம், பிரான்ஸ், கிரீஸ் ஆகிய நாடுகளில் நான்கு நாள் பயணமாக இன்று பிரான்ஸ் புறப்பட்டுச் சென்றார்.
விமான நிலையத்தில் குடியரசுத் தலைவரை பிரதமர் மன்மோகன் சிங், மூத்த அமைச்சர்கள் உள்ளிட்டோர் வழியனுப்பி வைத்தனர்.
ஸ்டிராஸ்பர்க் நகருக்கு முதலில் கலாம் செல்கிறார். அங்கு அமைந்துள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் 25ம் தேதி கலாம் உரை நிகழ்த்துகிறார். இந்திய குடியரசுத் தலைவர் ஒருவர் இங்கு உரை நிகழ்த்துவது இதுவே முதல் முறையாகும்.
தனது உரையின்போது தேசங்களின் ஒருங்கிணைப்பு மற்றும் ஒற்றுமை குறித்து கலாம் பேசவுள்ளார்.
பின்னர் 26ம் தேதி கிரீஸ் தலைநகர் ஏதென்ஸுக்கு அவர் செல்கிறார். 21 ஆண்டுகளுக்குப் பின்னர் கிரீஸ் நாட்டுக்கு ஒரு இந்தியத் தலைவர் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பயணத்தின்போது இரு நாடுகளுக்கும் இடையே 3 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.
கலாமுக்கு கிரீஸ் அதிபர் டாக்டர் கரோலஸ் பபோலியஸ் அரசு முறையிலான வரவேற்பை அளிக்கிறார். தனது கிரீஸ் பயணத்தின்போது அந்நாட்டு பிரதமர், கிரீஸ் நாடாளுமன்றத் தலைவர் உள்ளிட்டோரையும் கலாம் சந்தித்துப் பேசுகிறார்.
கிரீஸ் நாடாளுமன்றத்தில் கலாமுக்கு தங்கப் பதக்கமும் அளிக்கப்பட்டு கெளரவிக்கப்படவுள்ளது.
தனது பயணத்தின் ஒரு பகுதியாக மன நலம் குன்றிய சிறார்களுக்கான மறு வாழ்வு இல்லத்திற்கும் கலாம் சென்று அங்கு குழந்தைகளுடன் அவர் உரையாடுகிறார்.
28ம் தேதி தனது பயணத்தை முடித்துக் கொண்டு கலாம் டெல்லி திரும்புகிறார்.