விமானப்படைக்கு இறுதி எச்சரிக்கை- தமிழ்ச்செல்வன்
கிளிநொச்சி:காட்டுநாயகே மற்றும் பலாலி விமான தளங்கள் மீது விடுதலைப் புலிகள் நடத்திய விமான தாக்குதல்கள் 100 சதவீத வெற்றி பெற்றுள்ளன. இது இலங்கை விமானப் படைக்கு விடப்பட்ட இறுதி எச்சரிக்கை என புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.
இதுகுறித்து கிளிநொச்சியில் தமிழ்ச்செல்வன் அளித்த பேட்டியில்,
காட்டு நாயகே விமான தளம் மீது நாங்கள் நடத்திய விமான தாக்குதல் 100 சதவீத வெற்றியைப் பெற்றது. தற்போது பலாலி விமான தளம் மீதும் வெற்றிகரமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தமிழர்களின் பூமி மீது இலங்கை விமானப்படை நடத்தி வந்த தொடர் தாக்குதலை நிறுத்தும் வகையில் இந்த வான்வழித் தாக்குதல்களை நாங்கள் நடத்தியுள்ளோம்.
கடந்த 6 மாதங்களில் மட்டும், இலங்கை விமானப்படை தினசரி இருமுறை என மொத்தம் 90 நாட்கள் விமானப் படைத் தாக்குதலை நடத்தியது. இதில் 100க்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
கிழக்கில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த தமிழர்களில் மூன்றில் ஒரு பங்கு தமிழர்கள் பெரும் துயர நிலையில் தவிக்கின்றனர். தங்களது வீடுள், சொத்துக்களை விட்டு விட்டு ஓட்டம் பிடித்து அகதிகள் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
1 லட்சத்து 50 ஆயிரம் தமிழர்கள் உள்நாட்டிலேயே அகதிகள் ஆகியுள்ளனர்.
எங்களை ராணுவ ரீதியாக வீழ்த்த முடியாது என்பதால், பிற நாடுகளை தமிழர்களுக்கு எதிரான போரில் இழுக்க இலங்கை அரசு முயலுகிறது.
இலங்கைக்கு மட்டுமல்ல இப்பிராந்தியத்திற்கும், உலகத்திற்கும் விடுதலைப் புலிகள் பெரும் மிரட்டலாக உள்ளனர் என்று பொய்யான பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது இலங்கை அரசு. ஆனால் அது பலிக்காது.
தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்காக பாடுபட்டு வரும் இயக்கம் விடுதலைப் புலிகள் இயக்கம். பொறுப்பான ஒரு அரசை நாங்கள் நடத்தி வருகிறோம். ஜனநாயக முறையில் தமிழ் மக்களுக்கான அரசை நாங்கள் நடத்தி வருகிறோம். சுதந்திரமான அரசை அமைக்கும் முயற்சிகளில் வேகமாக முன்னேறி வருகிறோம்.
எங்களது ராணுவ அமைப்பும் நாளுக்கு நாள் முன்னேற்றம் கண்டு வருகிறது. ஒரு முழுமையான நாட்டுக்குரிய ராணுவ அமைப்பை நாங்கள் தற்போது கொண்டுள்ளோம்.
தாயகத்தின் சுதந்திரத்திற்காக பயிற்சி பெற்ற, முழுமையான திறன் படைத்த படை பலத்தை நாங்கள் கொண்டுள்ளோம். அதை உறுதிப்படுத்தியும் வருகிறோம்.
எங்களது சுதந்திரத்தை மட்டுமே நாங்கள் லட்சியமாக கொண்டுள்ளோம். அடக்குமுறை போக்குடன் செயல்பட்டு வரும் இலங்கை அரசைத் தவிர வேறு யாரும் எங்களுக்கு எதிரிகள் கிடையாது என்றார் தமிழ்ச் செல்வன்.