ஜேசுதாஸை கோவிலுக்குள் நுழைய விடாமல்தடுப்பதா?-தந்திரி மீது மந்திரி பாய்ச்சல்!
திருவனந்தபுரம்: பின்னணிப் பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ், குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்குள் நுழைய அனுமதிக்க முடியாது என அக்கோவிலின் தந்திரி கூற முடியாது.அதற்கு அவருக்கு உரிமை இல்லை என்று கேரள மாநில அறநிலையத்துறை அமைச்சர் சுதாகரன் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்தவரான ஜேசுதாஸ், அய்யப்பன் மீதும், கிருஷ்ணன் மீதும் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார். குறிப்பாக அவர் அய்யப்பன் குறித்து பாடிய பாடல்கள் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடமும், மலையாளிகளிடமும் புகழ் பெற்றவை.
அப்படிப்பட்ட ஜேசுதாஸ், குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்குள் நுழைய அந்த கோவில் தேவஸ்தானம் மறுத்து வருகிறது. இதனால் ஜேசுதாஸால் கிருஷ்ணன் கோவிலுக்குள் போய் சாமியை தரிசிக்க முடியாத நிலை நிலவுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜேசுதாஸ் குருவாயூர் கோவிலுக்கு சென்றார். ஆனால் அவரை கோவிலுக்குள் அனுமதிக்க முடியாது என குருவாயூர் கோவில் தந்திரி கூறி விட்டார். இதனால் ஜேசுதாஸ் சாமியை கும்பிடாமல் திரும்பினார்.
கேரளாவில் இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கோவிலுக்குள் யாரை அனுமதிக்கலாம், அனுமதிக்க கூடாது என்ற உரிமை தந்திரிக்கு இல்லை என அமைச்சர் சுதாகரன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
யார், யார் கோவிலுக்குள் போக வேண்டும், யார், யார் கோவிலுக்குள் போக கூடாது என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் தந்திரிக்கு கிடையாது.
பூஜை போன்ற காரியங்களில் தான் தந்திரிகள் வாக்கு இறுதி வாக்காக இருக்க வேண்டும். ஆனால் ஆச்சாரம் என்பது காலத்துக்கு ஏற்ப மாறுபடும். அதன்படி சமூகத்தின் அபிப்பிராயத்தை கேட்டு அரசுதான் யாரை கோவிலுக்குள் அனுப்பவது என முடிவெடுக்கும்.
ஜேசுதாசை கோவிலுக்குள் அனுமதிக்க நான் தேவசம் போர்டுக்கு ஒரு கடிதம் அனுப்பினேன். ஆனால் அக்கடிதம் இன்று வரை அப்படியே இருக்கிறது. அதற்குப் பதில் இல்லை.
ஆனால் பிரச்சனைக்கு மத்தியில் நான் கோவிலுக்குள் செல்ல விரும்பவில்லை என் ஜேசுதாஸ் கூறியுள்ளார். அவரை கட்டாயப்படுத்தி கோவிலுக்குள் அனுப்ப முடியாது என்பதால் தற்காலிகமாக இந்த பிரச்சனையை நிறுத்தி வைத்துள்ளேன்.
ஜேசுதாஸ் குருவாயூர் கோவிலுக்கு செல்ல 90 சதவீத மக்கள் ஆதரவு கொடுத்துள்ளனர். குருவாயூரப்பன் மீது நம்பிக்கை கொண்ட ஜேசுதாசை கோவிலுக்குள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது என அவர் கூறியுள்ளார்