புகார் கொடுக்க வந்தவரிடம் மப்பில்மல்லாடியஎஸ்ஐ
சென்னை:புகார் கொடுக்க வந்தவரிடம் போதையில் தள்ளாடியபடி இப்போது விசாரிக்க முடியாது என்று கூறி ரகளை செய்த சப் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.
சென்னை பம்மல் சங்கர் நகரைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் குடும்பத் தகராறு குறித்து புகார் கொடுக்க சங்கர் நகர் காவல் நிலையத்துக்கு வந்தார். அப்போது சப் இன்ஸ்பெக்டர் ஜான்சன் அங்கு இருந்தார்.
அவரிடம் புகார் கொடுத்து விட்டு விசாரிக்க வருமாறு அழைத்துள்ளார் வெங்கடேசன். ஆனால் முழு போதையில் இருந்த ஜான்சன், நீ கூப்பிட்டா உடனே வரணுமா, போய்யா வர முடியாது என்று கூறி வெங்கடேசனிடம் ரகளை செய்துள்ளார்.
அத்தோடு போதை தாங்க முடியாமல் தள்ளாடியபடி இருந்துள்ளார். இதையடுத்து துணை ஆணையர் அருணுக்குத் தகவல் கொடுத்தார் வெங்கடேசன்.
இதையடுத்து தாம்பரம் உதவி ஆணையர் பாண்டியன் அங்கு விரைந்து வந்தார். ஜான்சன் மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீஸாருக்கு உத்தரவிட்ட அவர், முதலில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அவர் மது அருந்தியிருப்பதை உறுதி செய்து சான்றிதழ் வாங்குமாறும் உத்தரவிட்டார்.
அதன்படி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு ஜான்சனை அள்ளிச் சென்ற போலீஸார் அவர் மது அருந்தியிருப்பதை உறுதி செய்து சான்றிதழ் பெற்றனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.