குற்றங்கள் குறைந்து விட்டன: கருணாநிதி
சென்னை: தமிழகத்தில் குற்றச் செயல்கள் குறைந்து சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இன்று சட்டசபையில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மதுவிலக்குத் துறைக்கான மானியக் கோரிக்கை மீதான விளக்க குறிப்புகளை முதல்வர் கருணாநிதி தாக்கல் செய்தார்.
இவற்றைத் தாக்கல் செய்து கருணாநிதி பேசுகையில், இந்த வருடம் காவல் துறையினர் திறமுடன் செயல்பட்டதன் மூலமாக தமிழகத்தில் பெரிய அளவில் எந்தவிதமான சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் உருவாகவில்லை. ஜாதி மத மோதல்கள் நடப்பதும் தடுக்கப்பட்டுள்ளது.
சமூக விரோத சக்திகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுத்ததன் விளைவாக சட்டம், ஒழுங்கு சிறப்பாக பேணப்பட்டு வருகிறது.
ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதால் ஏற்பட்ட சூழ்நிலை, தென்காசியில் நடந்த கொலை ஆகிய பிரச்சினைகள் சிறப்பாக கையாளப்பட்டு வன்முறை பரவாமல் தடுக்கப்பட்டது.
பயங்கரமான கொள்ளையர்களான கிரில் கொள்ளை கும்பலை சென்னையில் கைது செய்யப்பட்டனர்.
இரும்பு குண்டுகள் கடத்தியதில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ததன் மூலம் தீவிரவாதத்தை ஒடுக்குவதில் காவல்துறை தனது திறமையை காட்டியுள்ளது. தமிழகத்தில் குற்றநிகழ்வுகள் குறைந்துள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கையும் பெருமளவு குறைந்துள்ளது.
தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் அலுவலகத்திற்கு ரூ.20 கோடியே 31 லட்சம் செலவில் கூடுதல் கட்டிடம் கட்ட அரசு அனுமதியளித்துள்ளது.
காவல்துறை நவீன மயமாக்க ரூ.68 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.புதிய தொழில் நுட்பத்தின் வடிவமைக்கப்பட்ட அதிநவீன கருவிகள் வாங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறது.
10 மாவட்டங்களில் 20 போக்குவரத்து காவல்நிலையங்களும், 10 நடமாடும் நீதிமன்றங்களும் அமைக்கப்படும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்றார் கருணாநிதி.