மீனாட்சி கோயிலுக்கு மிரட்டல் விடுத்தது போலீஸா?
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக காவல்துறை மீதே சந்தேகம் திரும்பியுள்ளது.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு கடந்த சில தினங்களுக்கு முன் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதில் சித்திரை திருவிழா அன்று கார் கொண்டு வெடிக்கும். நகரின் பல இடங்களில் குண்டு வெடிக்கும் என அதில் கூறப்பட்டிருந்தது.
இதேபோல கடந்த ஆண்டும் சித்திரைத் திருவிழாவின் போது மிரட்டல் வந்தது. இதையடுத்து போலீஸார் மீனாட்சி அம்மன் கோவிலை தங்களது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.
அந்த சமயத்தில், போலீஸார் தங்களது குடும்பத்தினர், உறவினர்களை கோவிலுக்குள் எந்தவித சோதனையும், பாஸும் இல்லாமல் உள்ளே செல்ல அனுமதித்தனர். இதன் மூலம் சித்திரைத் திருவிழா நிகழ்ச்சிகளில் போலீஸ் குடும்பத்தினர் எந்தத் தடையும் இல்லாமல் சுவாமியை வழிபட முடிந்தது.
இந்த நிலையில் இந்த ஆண்டு சித்திரைத் திருவிழாவின்போதும் அதே போல மிரட்டல் வந்துள்ளது. இதுகுறித்து மீனாட்சியம்மன் கோவில் போலீஸார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.