கருணாநிதி பாராட்டு விழா: வருகிறார் சோனியா
சென்னை:முதல்வர் கருணாநிதியின் சட்டசபை பொன்விழா ஆண்டையொட்டி சென்னையில் நடைபெறவுள்ள பாராட்டு விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பங்கேற்கிறார்.
சட்டமன்ற உறுப்பினராக முதல்வர் கருணாநிதி 50 ஆண்டுகாலத்தை பூர்த்தி செய்துள்ளதைப் பாராட்டி அரசு சார்பில் வரும் மே 11ம் தேதி பொன்விழா நடத்தப்படவுள்ளது.
அன்றைய தினம் லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி சட்டசபையில் சிறப்புரையாற்றுகிறார். அன்று மாலை 5 மணிக்கு சென்னை தீவுத்திடலில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில், முதல்வர் கருணாநிதியை பாராட்டி பல்வேறு அரசியல் தலைவர்கள் பேசவிருக்கின்றனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் இக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
பிரதமர் மன்மோகன் சிங்கும் கூட்டத்தில் பங்கேற்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக முதல்வர் கருணாநிதியின் அரசியல் பேச்சுக்கள் மற்றும் அரிய புகைப்படங்கள் அடங்கிய கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.