விடுதலைப் புலிகளின் தலைவர்கள் கூட்டத்தில்விமானப்படை குண்டு வீச்சு- புலிகள் மறுப்பு
கொழும்பு:விடுதலைப் புலிகளின் முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது. ஆனால் இந்த சம்பவத்தில் உயிரிழப்பு ஏதும் இருந்ததா என்பது குறித்துத் தெரியவில்லை.
இதுகுறித்து இலங்கை விமானப்படை செய்தித் தொடர்பாளர் அஜந்த டி சில்வா கூறுகையில், வடக்கில் விடுதலைப் புலிகள் வசம் உள்ள ஒரு இடத்தில் இன்று விமானப் படை குண்டு வீசித் தாக்குதல் நடத்தியது. அந்த இடத்தில் புலிகள் அமைப்பின் முக்கியத் தலைவர்கள் கூடி பேசிக் கொண்டிருந்தபோது குண்டு வீசித் தாக்கப்பட்டது என்றார்.
ஆனால் இதை புலிகள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ராசய்யா இளந்திரையன் மறுத்துள்ளார். விமானப்படை தாக்குதல் நடத்தியதாக கூறும் இடத்தில் நாங்கள் யாரும் இல்லை. கடந்த ஆறு மாதங்களாக அந்த இடத்திற்கு நாங்கள் யாரும் போவதில்லை என்றார் இளந்திரையன்.