புலிகளின் அமெரிக்க கிளை தலைவர் திடீர் கைது
நியூயார்க்:விடுதலைப் புலிகள் அமைப்பின் அமெரிக்கக் கிளையின் தலைவராக கருதப்படும் கருணாநகரன் கந்தசாமி என்பவரை அமெரிக்க போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளின் அமெரிக்கப் பிரிவின் இயக்குநராக இருந்து வருகிறார் கந்தசாமி. நியூயார்க்கின் குயீன்ஸ் என்ற பகுதியில் புலிகள் அமைப்பின் அலுவலகம் உள்ளது. இந்த அமைப்பின் நடவடிக்கைகளை கவனித்து வருகிறார் கந்தசாமி.
நிதி திரட்டுவது, வழக்குகளுக்கான வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்வது உள்ளிட்ட பணிகளை கந்தசாமி கவனித்து வருகிறார். அமெரிக்க அரசு விடுதலைப் புலிகள் அமைப்பை தீவிரவாத அமைப்பாக அறிவித்து அதை தடை செய்துள்ளது.
இந்த நிலையில், விடுதலைப் புலிகள் அமைப்புக்கு நிதி, ஆயுதங்கள் திரட்டிக் கொடுத்ததாக கந்தசாமி மீது அமெரிக்க அரசு குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக கந்தசாமி மீது நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது,
அமெரிக்கா உள்பட 12 நாடுகளில் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு கிளைகள் உள்ளன. இதன் மூலம் தீவிரவாத செயல்களுக்கு நிதி, ஆயுதங்கள் வழங்கப்படுகின்றன
கடந்த 2004ம் ஆண்டு கந்தசாமி, நியூயார்க் நகரில் நிதி சேகரிப்பு கூட்டங்களை நடத்தினார். இதன் மூலம் வசூலான பணத்தை அவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைமையகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.
மேலும், அமெரிக்காவில் உள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் அனுதாபிகளையும், புலிகள் இயக்கத் தலைவர்களையும் சந்திக்க வைக்கவும் ஏற்பாடு செய்தார் கந்தசாமி.
அமெரிக்காவைப் பல காலமாக தளமாக பயன்படுத்த்திக் கொண்டு தனது தீவிரவாத செயல்களுக்கு பணம் திரட்டி வந்துள்ளது விடுதலைப் புலிகள் அமைப்பு. இதை தொடர அனுமதிக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து கந்தசாமியைக் கைது செய்ய நீதிபதி கியோ மட்சுமோடா உத்தரவிட்டார். இதையடுத்து கந்தசாமி கைது செய்யப்பட்டார். வழக்கு ஏப்ரல் 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கந்தசாமி மீதான குற்றச்சாட்டு நிரூபணமானால் அவருக்கு 15 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.