முரளி சூறாவளியை சமாளிக்க ரெடி: பான்டிங்
பிரிட்ஜ்டவுன்:உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் முத்தையா முரளீதரனின் சுழற்பந்து வீச்சு, மலிங்காவின் வேகப் பந்து வீச்சை சமாளிக்க ஆஸ்திரேலிய வீரர்கள் தயாராக இருப்பதாக அந்த அணியின் கேப்டன் ரிக்கி பான்டிங் கூறியுள்ளார்.
உலகக் கோப்பைக் கிரிக்கெட்டின் இறுதிப் போட்டி சனிக்கிழமை பார்படாஸில் நடைபெறுகிறது. தொடர்ச்சியாக 3வது முறையாக கோப்பையை வென்று புதிய சாதனை படைக்க ஆஸ்திரேலியாவும், 2வது முறையாக கோப்பையை தட்டிச் செல்ல இலங்கையும் ஆயத்தமாகி வருகின்றன.
ஆஸ்திரேலிய அணி ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடி அமர்க்களமாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. இலங்கையும் சவால்களை சந்தித்து திறம்பட விளையாடி இறுதிக்குள் வந்துள்ளது.
இலங்கைய அணியின் சுழற்பந்து சூறாவளி முத்தையா முரளீதரனும், வேகப் புயல் மலிங்காவும் எதிரணியினரை பயமுறுத்தி வருகிறார்கள். வலுவான ஆஸ்திரேலியாவையும் நாங்கள் எளிதாக வென்று கோப்பையுடன் ஊர் திரும்புவோம் என இலங்கை கேப்டன் ஜெயவர்த்தனே கூறியுள்ளார்.
ஆனால் கோப்பை எங்களுக்குத்தான், இலங்கையால் அதை தடுக்க முடியாது என்று ஆஸ்திரேலிய கேப்டன் பான்டிங் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், வேகப் பந்து வீச்சாளர் லசித் மலிங்காவையும், முரளீதரனையும் சமாளித்து ரன் சேர்க்கக் கூடிய வகையில் எங்களிடமும் திறமையான வீரர்கள் உள்ளனர்.
முரளி நல்ல ஸ்பின்னர் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் அவரை சமாளிக்கக் கூடிய பேட்ஸ்மென்கள் எங்களிடம் இருப்பதை யாரும் மறந்து விடக் கூடாது.
இலங்கை அணி சிறந்த பேட்ஸ்மென்கள், பந்து வீச்சாளர்களுடன் உள்ளன. ஆனால் இது இறுதிப் போட்டி. இதில் எதிராளியைப் பார்த்து பயப்பட நேரம் இல்லை.
1996ல் இலங்கை எங்களைத் தோற்கடித்து கோப்பையை வென்றது ஆனால் அடுத்து வந்த இரு உலகக் கோப்பைப் போட்டிகளிலும் நாங்கள் சாம்பியன் ஆனோம்.
இலங்கையை பலமுறை நாங்கள் தோற்கடித்துள்ளோம். எனவே 3 முறையாக கோப்பையை வென்று ஹாட்ரிக் சாதனையுடன்தான் நாடு திரும்புவோம்.
இறுதிப் போட்டியில் உறுதியாக எங்ளுக்கே வெற்றி. அதைத் தடுக்க இலங்கையால் முடியாது என்று கூறியுள்ளார் பான்டிங்.