காமராஜர் மண்டப அடிக்கல் விழா- புதியஅரசியல் கட்சிக்கு சரத் முன்னோட்டம்?!
சென்னை:கர்மவீரரின் லட்சியங்களுக்கும் எண்ணங்களுக்கும் விழுந்துள்ள திரைகளை விலக்கவும் நாம் ஒன்றுபட வேண்டும் என நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.
பெருந்தலைவர் காமராஜர் மணி மண்டபம் அவர் பிறந்த விருதுநகரில் 22 ஏக்கர் நிலப் பரப்பில அமைக்கப்படவிருக்கிறது.
இதற்கான அடிக்கல் நாட்டுவிழா நாளை மாலை காமராஜர் பொறியியல் கல்லூரி எதிரில் நடைபெறவுள்ளது.
இதற்கு நடிகர் சரத்குமார் மற்றும் அவர் மனைவி ராதிகா சரத்குமார் ஆகியோர் தலைமை தாங்குகின்றனர். நாடார் பேரவை தலைவர் நாராயணன் வரவேற்று பேசுகிறார்.
இந்த விழாவில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுவிழாவின் கல்வெட்டை திறந்து வைத்து உரை நிகழ்த்துகிறார். மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ். இளங்கோவன் சிறப்புரை நிகழ்த்துகிறார்.
இது குறித்து நடிகர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
என் வாழ்வில் உன்னதமான நாளான 29ம் தேதி என் இலட்சிய கனவு நிறைவேற போகிறது. பெரும்தலைவர் காமராஜருக்கு மணி மண்டபம் கட்ட அடிக்கல் நாட்டும் விழா.
விருதுநகர் நெடுஞ்சாலையில் காமராஜர் பொறியியல் கல்லூரி எதிரில் 22 ஏக்கர் பரப்பளவில் இந்த மணிமண்டபம் அமையவுள்ளது.
நான் இருவேறு கட்சிகளில் இணைந்து பிரிந்தாலும், கர்மவீரர் காமராஜரின் அறவழியில் நடப்பதை லட்சியமாக கொண்டுள்ளேன்.
மூன்று ஆண்டுகளுக்கு முன் சென்னை தீவுத் திடலில் நடந்த பெருந்தலைவரின் 102வது பிறந்தநாள் விழாவின் போது அவருக்கு மணிமண்டபம் கட்டவேண்டும் என்ற எனது விருப்பத்தை தெரிவித்திருந்தேன்.
இந்த மகிழ்ச்சியான நேரத்தில் நான் சொல்ல நினைப்பது,
தமிழர்களின் புதிய வழியும், நம்பிக்கை ஒளியும் மறுபடியும் திரும்ப மகத்தான சக்தி ஒன்று உருவாக்க ஒன்றுபடுவோம். இதற்கு கர்மவீரர் காமராஜரின் மணிமண்டப அடிக்கல் நாட்டு விழாவில் சபதம் ஏற்போம்.
அரசியல் உணர்வுகளுக்கும், காழ்ப்புணர்வுகளுக்கும் அப்பாற்பட்ட தமிழர்களின் வாழ்வில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கர்மவீரரின் லட்சியங்களுக்கும் எண்ணங்களுக்கும் விழுந்துள்ள திரைகளை விலக்கவும் நாம் ஒன்றுபட வேண்டும் என்று கூறியுள்ளார்.
நாடார் சமூக ஓட்டுக்களை மனதில் வைத்து தனிக் கட்சி தொடங்கும் திட்டத்தில் இருக்கும் சரத்குமாரின் அரசியல் கட்சியின் பிரவேசத்துக்கு இந்த விழா பிள்ளையார் சுழி போடும் என்று தெரிகிறது.