கொழும்பு விமான நிலையம்-வட்டமடித்த மர்ம விமானங்கள்-சென்னைக்கு டர்ன் ஆன விமானங்கள்
கொழும்பு:கொழும்பு அருகே உள்ள கட்டுநாயகே விமானதளத்தை சில மர்ம விமானங்கள் சுற்றிச் சுற்றி வந்ததால் கொழும்பில் பெரும் பீதி ஏற்பட்டது. விமான தளத்திலும், கொழும்பு நகரிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
விடுதலைப் புலிகள் தற்போது வான்வழித் தாக்குதலில் குதித்துள்ளனர். முதலில் கட்டுநாயகே விமானப்படை தளத்தில் அவர்கள் அதிரடி தாக்குதல் நடத்தினர். இதில் 3 பேர் கொல்லப்பட்னர்.
புலிகளின் இந்த விமானத் தாக்குதல் இலங்கை அரசை நிலை குலைய வைத்தது. இந்த அதிர்ச்சியிலிருந்து இலங்கை அரசு விலகுவதற்குள் பலாலி விமான தளம் மீது புலிகள் சரமாரியாக குண்டு வீசி விமானம் மூலம் தாக்குதல் நடத்தினர்.
இதில் 6 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். விமான தளத்திலும் சேதம் ஏற்பட்டது. இதனால் இலங்கையில் பெரும் பீதி நிலவி வருகிறது.
இந்த நிலையில், கட்டுநாயகே விமான தளத்தின் மீது நேற்று நள்ளிரவு 3 மர்ம விமானங்கள் சுற்றிச் சுற்றி வந்தன. இதனால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டது. உடனடியாக விமானதளம் மூடப்பட்டது. அருகில் இருந்த சர்வதேச விமான நிலையமும் மூடப்பட்டது.
இதையடுத்து கொழும்பு செல்லும் விமானங்கள் அனைத்தும் சென்னைக்கு திருப்பி விடப்பட்டன.
இரு விமான நிலையங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதேபோல கொழும்பு நகரிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தகவல் தொடர்பு வசதிகளும் துண்டிக்கப்பட்டன.
ராணுவம் மற்றும் விமானப்படைகள் உஷார்படுத்தப்பட்டன. ஆனால் சிறிது நேரத்தில் தாக்குதல் எதையும் நடத்தாமல் அந்த மர்ம விமானங்கள் மூன்று முறை வட்டமடித்து விட்டு போய் விட்டன.
அவை எங்கிருந்து வந்தன, என்ன வகையான விமானங்கள் என்பது குறித்துத் தகவல் இல்லை. மர்ம விமானங்கள் கட்டுநாயகே விமான தளத்தை வட்டமடித்த தகவல் கொழும்பு முழுவதும் பரவி மக்கள் பீதியில் மூழ்கியுள்ளனர்.