லோகநாதன் மனைவி, மகளுக்கு அரசு வேலை:அமெரிக்காவிலேயே செட்டிலாகிறார்கள்
சென்னை:அமெரிக்காவின் விர்ஜீனியா பல்கலைக்கழக வளாகத்தில் தென் கொரிய மாணவரால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக பேராசிரியர் லோகநாதனின் மனைவிக்கும், மகளுக்கும் அமெரிக்க அரசு வேலை தர முன்வந்துள்ளது. இதையடுத்து அவர்கள் இருவரும் அமெரிக்காவிலேயே செட்டிலாக முடிவு செய்து விட்டனர்.
அமெரிக்காவின் விர்ஜீனியா டெக் பல்கலைக்கழகத்தில் கடந்த வாரம் தென் கொரிய சோ சியூங் ஹூ என்ற மாணவர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் 32 பேர் உயிரிழந்தனர். இதில் தமிழகத்தை சேர்ந்த பேராசிரியர் லேகநாதனும், மும்பையை சேர்ந்த மாணவி மினால் என்பவரும் அடங்குவர்.சுட்டுக்கொல்லப்பட்ட பேராசிரியர் லோகநாதனின் விருப்பப்படி அவரது உடல் விர்ஜீனியா டெக் பல்கலைக்கழக வளாகத்திலேயே மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
லோகநாதனின் குடும்பத்தினர் 9 பேர் உடல் தகனத்திற்காக அமெரிக்கா சென்றிருந்தனர். இதற்கான செலவை தமிழக அரசே ஏற்றுக் கொண்டது.
லோகநாதன் குடும்பத்தினர் இறுதி சடங்கில் கலந்து கொண்டு நேற்று இரவு சென்னை திரும்பினர். உடல் தகன நிகழ்ச்சி குறித்து அவரது குடும்பத்தினர் கூறுகையில், லோகநாதனின் மனைவி உஷா (46). அமெரிக்காவிலேயே 2 மகள்களுடன் வசித்து வருகிறார். உஷாவுக்கு அதே பல்கலைக்கழகத்தில் அமெரிக்க அரசு வேலை வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதே போல் அவரது மகள் உமாவுக்கும் (21) வேலை வழங்கியுள்ளது.
தற்போது உமா அதே பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் படித்து வருகிறார். இன்னும் அவரது படிப்பு முடிவதற்கு 6 மாதங்கள் இருக்கிறது. அவரது படிப்பு முடிந்ததும் அதே பல்கலைக்கழகத்தில் பணி புரிய பணி நியமனம் வழங்கப்படும் எனவும் அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
உஷாவும் அவரது இரு மகள்களும் அமெரிக்காவிலேயே தொடர்ந்து வசிக்க முடிவு செய்துள்ளனர்.
நாங்கள் அமெரிக்கா செல்ல நிதியுதவி அளித்த முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்கத் திட்டமிட்டுள்ளோம் என்றனர்.