கள்ளச்சாராயம், கந்து வட்டி, கட்டப் பஞ்சாயத்து:சட்டசபையில் பாமக சரமாரி புகார்
சென்னை: தமிழகத்தில் கட்டப் பஞ்சாயத்து, கள்ளச்சாராயம், கடத்தல், கந்து வட்டி ஆகியவை பெருகி விட்டது என பாமக தலைவர் ஜி.கே மணி சட்டசபையில் புகார் கூறினார்.
சட்டசபையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் மதுவிலக்குத்துறை ஆகியவற்றிற்கான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு ஜி.கே மணி பேசுகையில், தமிழகத்தில் கள்ளச்சாராயம், கஞ்சா, கந்துவட்டி, கற்பழிப்பு, கடத்தல், கட்டப்பஞ்சாயத்து ஆகியவை பெரும் பிரச்சனையை ஏற்படுத்தி வருகிறது. இந்த குற்றங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.
வெங்கடேச பண்ணையார், பங்க் குமார் போன்றவர்களை போலீஸார் என்கவுன்டர் என்ற பெயரில் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். இதுபோன்ற செயல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெருகி வரும் குற்றங்களின் எண்ணிக்கைக்குக் ஏற்ப காவலர்களை அதிகப்படுத்த வேண்டும். அமைச்சக பணியாளர்களையும் கூடுதலாக நியமிக்க வேண்டும். காவல்துறையினருக்கு என்று தனியாக மருத்துவமனை அமைக்க வேண்டும்.
டாஸ்மாக் மூலம் தமிழக அரசுக்கு ஏரளமான வருமானம் வருகிறது. இந்த வருமானம் நடுத்தர மக்களின் உழைப்பை உறிஞ்சுவதன் மூலம் கிடைக்கும் வருமானம். எனவே படிப்படியாக தமிழகத்தில் மதுவை ஒழிக்க வேண்டும் என்றார்.