காவிரி-60 டிஎம்சி கோரி நடுவர் மன்றத்தில் தமிழக அரசு மனு
டெல்லி:தமிழகத்திற்கு காவிரியில் கூடுதலாக நீர் தரக் கோரியும், இறுதித் தீர்ப்பில் உள்ள தமிழகத்திற்குப் பாதகமான அம்சங்களை நீக்கக் கோரியும் காவிரி-60 டிஎம்சி கோரி நடுவர் மன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை எதிர்த்து நடுவர் மன்றத்தில் மனு தாக்கல் செய்ய அரசு முடிவெடுத்தது. மேலும், தீர்ப்பில் தமிழகத்திற்குப் பாதகமாக உள்ள அம்சங்கள் குறித்து விளக்கம் கேட்கவும் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி நேற்று நடுவர் மன்றத்தில் தமிழக அரசின் விளக்க மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
தமிழகத்தில் நடந்து வரும் சம்பா, குறுவை, தாளடி ஆகிய மூன்று போக விவசாயத்தை நிறுத்திக் கொண்டு, தண்ணீரை நம்பி இல்லாத பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும் என நடுவர் மன்றம் கூறியிருப்பது ஏற்புக்குரியதல்ல.
மூன்று போக சாகுபடிக்குத் தேவையான தண்ணீரை கருத்தில் கொண்டு கர்நாடகம் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தின் நீர்த் தேவைக்கேற்ப கூடுதலாக 60 டிஎம்சி நீரை விடுவிக்க உத்தரவிட வேண்டும்.
9ம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே நடைமுறையில் இருந்து வரும் சேத்தியா அணைக்கட்டு தொடர்ந்து நீடிக்க அனுமதிக்க வேண்டும்.
கர்நாடகத்தின் ஹேமாவதி அணை சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்குத் தேவையான அளவை விட கூடுதலாக வழங்கப்பட்டுள்ள நீரைக் குறைக்க வேண்டும்.
நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதை கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நிர்வாக வாரிய அமைப்புக்குக் கூடுதல் அதிகாரம் அளிக்க வேண்டும்.
பன் மாநில நதி நீர் தாவா சட்டம் 1956, பிரிவு 5(3)ன் கீழ் விளக்கம் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.