புலிகள் மீண்டும் விமானத் தாக்குதல்பெட்ரோல் கிட்டங்கி நாசம்-கொழும்பில் பீதி
கொழும்பு:கொழும்பு நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று அதிகாலை விடுதலைப் புலிகள் தங்களது இலகு ரக விமானங்கள் மூலம் அதிரடித் தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு பெட்ரோல் சேமிப்புக் கிட்டங்கி எரிந்து நாசமானது. உயிரிழப்பு குறித்து தெரியவில்லை. கொழும்பு முழுவதும் பெரும் பதட்டம் நிலவுகிறது.
விடுதலைப் புலிகளின் வான் புலிகள் பிரிவு கடந்த இரு மாதங்களில் இருமுறை விமானம் மூலம் இரு பெரும் விமான தளங்களைத் தாக்கிய அதிர்ச்சியிலிருந்து இன்னும் இலங்கை மீளவில்லை.
இந்த இரு தாக்குதல்களிலும் ஈடுபட்ட புலிகளின் இலகு ரக விமானங்கள் படு பத்திரமாக தங்களது விமான தளத்திற்குத் திரும்பி விட்டன. இந்த நிலையில் நேற்று இரவு இலங்கை முழுவதும் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியை இலங்கை மக்கள் டிவிகளில் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் கொழும்பு நகரில் புலிகளின் விமானம் ஊடுறுவியது.
இதை ரேடார் மூலம் இலங்கை விமானப்படை கண்டறிந்தது. இதையடுத்து கொழும்பில் உள்ள சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது. கொழும்பு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தகவல் தொடர்பு இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன. இதனால் கொழும்பில் பெரும் பதட்டமும், பீதியும் நிலவியது.
சாலைகளில் போக்குவரத்து முற்றிலும் நின்று போனது. பெரும் பதட்டம் நிலவிய வேலையில் புலிகள் எங்கு தாக்குதல் நடத்தப் போகிறார்கள் என்று தெரியாமல் இலங்கை படையினர் பெரும் குழப்பத்தில ஆழ்ந்தனர்.
இந்த நிலையில் இலங்கை படையினரின் கண்காணிப்பை முறியடித்து இன்று அதிகாலை இரு இடங்களில் புலிகளின் விமானங்கள் தாக்குதல் நடத்தின.
இதுகுறித்து விடுதலைப் புலிகளின் ராணுவச் செய்தித் தொடர்பாளர் ராசய்யா இளந்திரையன் கூறுகையில், அதிகாலை 1.50 மணிக்கு கொலன்னவா என்ற இடத்தில் உள்ள, இலங்கை விமானப்படைக்கு எரிபொருள் சப்ளை செய்யும், பெட்ரோல் சேமிப்பு கிட்டங்கியை தமிழீழ விமானப்படை வீரர்கள் குண்டு வீசித் தாக்கினர்.
பின்னர் 2.05 மணிக்கு முத்துராஜவாலா என்ற இடத்தில் உள்ள பெட்ரோல் சேமிப்பு கிட்டங்கி மீது 2வது தாக்குதல் நடத்தப்பட்டது. இரு இடங்களிலும் குண்டு வீசித் தாக்குதல் நடத்திய பின்னர் விமானப்படையின் இரு விமானங்களும், விமானிகளும் வன்னியில் உள்ள விமான தளத்துக்குப் பத்திரமாக திரும்பி விட்டனர் என்று கூறியுள்ளார் இளந்திரையன்.
புலிகள் நடத்தியுள்ள இந்த 3வது விமானத் தாக்குதலில் இரு கிட்டங்கிகளும் தீயில் எரிந்து நாசமாகி விட்டதாக கூறப்படுகிறது. முத்துராஜவாலாவில் உள்ள 3 எண்ணை டேங்குகள் வெடித்துச் சிதறி எரிந்து வருகின்றன.
கொலன்னவா, கொழும்பு நகரின் கிழக்கில் உள்ளது. முத்துராஜவாலா புறநகர்ப் பகுதியில் உள்ளது.
வன்னிப் பகுதியில் இலங்கை விமானப்படை நடத்திய அதிரடி விமானத் தாக்குதலுக்குப் பழிவாங்கும் வகையில் இந்த விமானத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இளந்திரையன் கூறியுள்ளார்.
விமானத் தாக்குதல் நடக்கலாம் என்று அதிகாரிகள் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்ததால் கொழும்பு நகர் முழுவதும் பெரும் பீதி ஏற்பட்டது.
கொழும்பு மீது புலிகளின் விமானம் பறப்பதை தாங்கள் பார்த்ததாக பொதுமக்களில் சிலர் கூறியுள்ளனர்.
கடந்த இரு தாக்குதல்களின்போதும் (கட்டுநாயகே விமான தளம் மற்றும் பலாலி விமான தளம்) புலிகளின் விமானங்களை இலங்கை பாதுகாப்புப் படை ரேடார்களால் கண்டறிய முடியவில்லை. ஆனால் நேற்று நடந்த தாக்குதலுக்கு முன்பாக புலிகளின் விமானம் ஊடுறுவியதை ரேடார்கள் கண்டுபிடித்தன. இருப்பினும் புலிகளின் தாக்குதலை அவர்களால் முறியடிக்க முடியவில்லை.
மார்ச் 26ம் தேதி புலிகளின் முதல் விமானத் தாக்குதல் நடந்தது. அன்று அதிகாலை கட்டுநாயகே விமானத் தளத்தில் புலிகள் குண்டு வீசித் தாக்கியதில் 3 பேர் உயிரிழந்தனர். 11 பேர் காயமடைந்தனர். அதன் பின்னர் சில நாட்களுக்கு முன்பு பலாலி விமான தளத்தில் தாக்குதல் நடந்தது. இதில் 6 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் 3வது விமானத் தாக்குதலை வெற்றிகரமாக புலிகள் நடத்தியுள்ளது பெரும் பீதியையும், பதட்டத்தையும் அதிகரித்துள்ளது.