நாளை கூத்தாண்டவர் கோவில் திருவிழா
விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டம் கூவாகத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில் நாளை இரவு அரவாணிகளுக்கு தாலி கட்டும் விழா நடைபெறவுள்ளது.
இதையொட்டி கூவாகத்தில் அரவாணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி தினத்தன்று கூத்தாண்டவர் கோவிலில் அரவாணிகள் கூடி விழா கொண்டாடுவது வழக்கம். சித்ரா பவுர்ணமி தினத்தன்று அரவாணிகளுக்கு தாலி கட்டும் வைபவம் நடைபெறும்.
இந்த ஆண்டும் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரைத் திருவிழா களை கட்டியுள்ளது. ஆயிரக்கணக்கான அரவாணிகள் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் கூவாகத்தில் குவிந்துள்ளனர்.
நாளை இரவு அரவாணிகளுக்கு கோவில் பூசாரி தாலி கட்டும் நிகழ்ச்சி நடைபெறும். இதையடுத்து மே 2ம் தேதி காலை அரவான் களப்பலி கொடுக்கப்படும் நிகழ்ச்சி நடைபெறும்.
இதையடுத்து அரவாணிகள் அனைவரும் விதவைக் கோலம் பூண்டு ஒப்பாரி வைத்து அழுவார்கள். அத்துடன் சித்திரைத் திருவிழா முடிவுறும்.
சித்திரைத் திருவிழாவையொட்டி கூவாகத்தில் பல்வேறு அமைப்புகளின் சார்பில் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மிஸ் கூவாகம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
கூவாகம் விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்புப் பேருந்துகளுக்கும் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் ஏற்பாடு செய்துள்ளன.