பெரியாறு அணை பலமாக உள்ளது:கேரளாவின் முகத்தில் கரி பூசிய நிபுணர் குழு
மதுரைமுல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது. அணைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று மத்திய அரசு அனுப்பிய நிபுணர் குழு தனது ஆய்வுக்குப் பின்னர் தெரிவித்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் பலம் குறித்து ஆராய்வதற்காக மத்திய நீர் வள ஆணையத்தின் சார்பில் நிபுணர் குழு ஒன்று அனுப்பப்பட்டது.
உ.பி. மாநில முன்னாள் தலைமைப் பொறியாளர் சர்மா தலைமையிலான இக்குழு முல்லைப் பெரியாறு அணைக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தியது.
பின்னர் சர்மா செய்தியாளர்களிடம் பேசுகையில், முல்லைப் பெரியாறு அணையில் பொறியியல் பிரச்சினைகள் எதுவும் இல்லை. அணையின் பலம் குறித்து இப்போது கூற முடியாது.
இருப்பினும் முல்லைப் பெரியாறு அணை போன்ற 65 பழமையான அணைகளை மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இந்த அணைகள் அனைத்தும் தற்போதைய நிலவரப்படி பலமாகவே உள்ளன. மக்களுக்கு பயன்படும் வகையிலும் உள்ளன.
இந்த நிமிடத்தில் முல்லைப் பெரியாறு அணையில் எந்தப் பிரச்சினையும் இல்லை. இரு மாநிலங்களுக்கு இடையிலான நீர்ப் பகிர்வுக்கு முல்லைப் பெரியாறு அணை மிகச் சிறந்த உதாரணமாக விளங்குகிறது.
இந்த அணையக் கட்டிய விதமும், இதில் நீர் தேக்கப்படுட்டு தமிழகத்திற்கு விநியோகிக்கப்பட்டு வந்த விதமும் மிகுந்த வியப்பையும், ஆச்சரியத்தையும் அளிக்கிறது. மிகச் சிறந்த அணையாக முல்லைப் பெரியாறு அணை திகழ்கிறது என்பதில் சந்தேகமே இல்லை என்றார் சர்மா.
சர்மா தலைமையிலான நிபுணர் குழுவின் ஆய்வு முடிவுகள், தமிழக அரசுக்கும், தமிழகத்திற்கும் மிகுந்த தெம்பூட்டும் வகையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.