அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு;3 பேர் சாவு-மர்ம நபர் சுட்டுக் கொலை!
கான்சாஸ் சிட்டி:அமெரிக்காவின் கான்சாஸ் சிட்டி நகரில் ஒரு மர்ம நபர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 3 பேர் இறந்தனர். கடைசியில் அந்த நபரை போலீஸார் சுட்டுக் கொன்றனர்.
விர்ஜீனியா டெக் பல்கலைக்கழகத்தில் நடந்த வெறித்னமான துப்பாக்கிச் சூடு சம்பவமே இன்னும் உலக மக்களின் நினைவிலிருந்து மறையவில்லை. இந்த நிலையில் அதேபோன்ற ஒரு சம்பவம், கான்சாஸ் சிட்டி நகரில் உள்ள வணிக வளாகத்தின் கார் பார்க்கிங்கில் நடந்துள்ளது. இதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து கான்சாஸ் சிட்டி காவல் அதிகாரி டோனி சாண்டர்ஸ் கூறுகையில், ஒரு மர்ம நபர் நேற்று இரவு கான்சாஸ் சிட்டியில் உள்ள முக்கிய வணிக வளாகத்திற்கு வந்தார்.
நூற்றுக்கணக்கான மக்கள் அப்போது அந்த வளாகத்தில் இருந்தனர்.
காரை பார்க்கிங்கில் நிறுத்திய அந்த நபர் திடீரென தனது கைத்துப்பாக்கியால் தனக்கு அருகில் இருந்த இருவரை சுட்டுக் கொன்றார்.
பின்னர் உள்ளே நுழைந்த அந்த நபர் 2 பேரை காயப்படுத்தினார். ஞாயிற்றுக்கிழமை என்பதால் மிகப் பெரிய அளவில் கூட்டம் காணப்பட்டது. துப்பாக்கிச் சூடு சம்பவத்தையடுத்து அங்கு பெரும் குழப்பமும், பீதியும் ஏற்பட்டது.
அனைவரும் வணிக வளாகத்தை விட்டு தப்பி ஓட முயன்றதால் பெரும் கூட்ட நெரிசலும் ஏற்பட்டது. உடனடியாக போலீஸார் அங்கு விரைந்து வந்தனர். அங்கு துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்த அந்த நபரை போலீஸார் சுட்டுக் கொன்றனர்.
இந்த நபர், வணிக வளாகத்திற்குள் வெறித்தனம் செய்வதற்கு முன்பு அருகில் இருந்த ஒரு வீட்டில் இருந்த ஒருவரை சுட்டுக் கொன்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
இந்த சம்பவத்தால் சுமார் கால் மணி நேரம் அந்த வணிக வளாகத்தில் பெரும் பீதி காணப்பட்டது.