எந்தக் கூட்டணியிலும் சேர மாட்டேன்: விஜயகாந்த்
ஓசூர்:யார் என்ன மாதிரியான நெருக்கடியைக் கொடுத்தாலும், தொல்லைகள் கொடுத்தாலும் அதற்கு நான் பணிந்து விட மாட்டேன். எந்தக் கூட்டணியிலும் சேர மாட்டேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தேமுதிக சார்பில் 50 பேருக்கு இலவச திருமணம் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்திப் பேசினார் விஜயகாந்த்.
அவர் பேசுகையில், பலவகையிலும் எனக்குத் தொந்தரவு கொடுத்துப் பார்க்கிறார்கள். கல்யாண மண்டபத்தை இடிப்போம் என்றார்கள், வருமான வரி சோதனை என்றார்கள். இப்படியெல்லாம் செய்தால் இவன் நம் பக்கம் வந்து விடுவான் என்பது அவர்களது எண்ணம்.
யார், என்ன தொந்தரவு கொடுத்தாலும் நான் பணிய மாட்டேன். எத்தனை தொந்தரவுகள் கொடுத்தாலும், தொல்லை கொடுத்தாலும் எந்தக் கூட்டணியிலும் சேர மாட்டேன்.
மலை ஏறுகிற வரைதான் கஷ்டம் தெரியும். ஆனால் ஏறி விட்ட பிறகுதான், மலை நமது காலுக்குக் கீழ் இருப்பது புரியும்.
விஜயகாந்த்தை அழிக்கவும், அடிக்கவும் நினைக்கின்றனர். ஆனால் அது நடக்காது. நான் பிழைப்புக்காக அரசியலுக்கு வரவில்லை, மக்களுக்கு உழைப்பதற்காக வந்துள்ளேன் என்றார் விஜயகாந்த்.
கூட்டணியே வைக்க மாட்டேன் என்று பேசி வந்த காந்த், சமீபத்தில் தான் கூட்டணிக்குத் தயார் என்று பல்டி அடித்திருந்தார் விஜய்காந்த். இப்ேபாது ரிவர்ஸ் பல்டி அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.