நுழைவுத் தேர்வு ரத்து: தடை வாங்குவதைதடுக்க சுப்ரீம் கோர்ட்டில் அரசு மனு
டெல்லி:தொழிற்படிப்புகளுக்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு கொண்டு வந்த சட்டம் செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு யாரும் தடை வாங்கி விடாமல் தடுப்பதற்காக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
தமிழகத்தில் தொழிற்படிப்புகளுக்கு நடத்தப்பட்டு வந்த நுழைவுத் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தது. இதை எதிர்த்து அஸ்வின்குமார் என்ற மாணவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழக அரசின் சட்டம் செல்லும் என சில நாட்களுக்கு முன்பு தீர்ப்பளித்தது.
இந்த நிலையில் இந்தத் தீர்ப்புக்கு யாரும் தடை வாங்கி விடாமல் தடுப்பதற்காக தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அரசின் உயர் கல்வித்துறைச் செயலாளர் கணேசன் இந்த மனுவை இன்று தாக்கல் செய்தார். இதுகுறித்து அரசு வழக்கறிஞர் விஸ்வநாதன் கூறுகையில், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு யாரும் தடை வாங்கி விடாமல் தடுக்கும் நோக்கில் இந்த கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து தடை கோரி யாராவது மனு தாக்கல் செய்தால், தமிழ அரசின் கருத்தை கேட்காமல் உச்சநீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது.
இந்த ஆண்டு முதலே நுழைவுத் தேர்வு ரத்து சட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு உறுதியாக உள்ளது. அதனால்தான் இந்த கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார்.