போலீஸ் கல்யாணம்.. கலாட்டா கல்யாணம்
திருச்சி:ஏட்டையாவை திருமணம் செய்து கொண்ட பெண் போலீஸ், தந்தை எதிர்த்ததால் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார்.
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலையத்தில் போலீஸாக இருக்கும் பிரேமலதாவும், அவருடன் பணிபுரியும் ஏட்டு பார்த்திபனும் காதலித்து வந்தனர்.
இருவரும் வெவ்வேறு வகுப்பை சேர்ந்தவர்கள் என்பதால் இரு வீட்டிலும் எதிர்த்தனர். இதனால் குடும்பத்தாருக்கு தெரியாமல் திருமணம் செய்ய இருவரும் முடிவு செய்தனர்
இதன்படி கோவிலில் திருமணம் செய்து கொண்டு அதை திருச்சியில் பதிவும் செய்தனர்.
இந்நிலையில் லால்குடி காவல் நிலையத்தில் ஏட்டாக இருக்கும் பிரேமலதாவின் தந்தைக்கு இந்த விவரம் தெரிய வந்தது.
இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர் தன் மகளை, பார்த்திபன் கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டதாக திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இவர்கள் அனைவரும் காவல்துறை சார்ந்தவர்களாக இருப்பதால் இதுகுறித்து காவல்துறை உயரதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.
இன்ஸ்பெக்டர் மரகதம் சார்லஸ் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இறுதியில் இரு குடும்பத்தாரும் அவர்கள் திருமணத்தை ஆதரித்து சேர்ந்து வாழ சம்மதம் தெரிவித்தனர்.