இளங்கோவன் அணியில் 15 எம்எல்ஏக்கள்:நேற்று 2வது ரகசிய ஆலோசனை
சென்னை:ஜி.கே.வாசன் எதிர்ப்பு எம்.எல்.ஏக்கள் மீண்டும் ரகசியமாகக் கூடி ஆலோசனை நடத்தியுள்ளனர். இனிமேல் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைமையில் செயல்படவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
தமிழக காங்கிரஸ் கட்சியில் பல கோஷ்டிகள் உள்ளன. ஜி.கே.வாசன், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தங்கபாலு என பல கோஷ்டித் தலைவர்களும் உள்ளனர். ஒருவரை ஒருவர் காலை வாரி விடுவதிலேயே இவர்களது பாதி அரசியல் காலம் போய் விட்டது. மீதிக் காலத்தையும் அப்படியே கழிக்க பேரவாவுடன் உள்ளனர்.
இந்த நிலையில் சமீபத்தில் போளூர் வரதன் தலைமையில் வாசன் எதிர்ப்பாளர்கள் திடீரென கூடி ரகசிய கூட்டம் போட்டனர். அக்கூட்டத்தில் சட்டசபையில் தங்களுக்குப் பேச வாய்ப்பு அளிப்பதில்லை என்று குமுறலை வெளியிட்டனர். சட்டசபை காங்கிரஸ் தலைவர் சுதர்சனம் மீதும் சரமாரியாக குற்றம் சாட்டினர்.
இந்த நிலையில் நேற்று மீண்டும் ஒரு ரகசிய கூட்டம் நடந்துள்ளது. போளூர் வரதன் இல்லத்தில் நடந்த இக்கூட்டத்திற்கு இளங்கோவன் தலைமை தாங்கியுள்ளார்.
யசோதா உள்ளிட்ட 12 எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர். வசந்தகுமார், ராஜ்குமார், கோபிநாத் ஆகிய 3 எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாக தகவல் தெரிவித்திருந்தனராம்.
கூட்டத்தில் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரமும் பங்கேற்றார். மறுபடியும் சுதர்சனம் தலையைத்தான் உருட்டியுள்ளனர். சுதர்சனம் பொருளாளர், சட்டசபை காங்கிரஸ் தலைவர் என இரு பதவிகளை வகித்து வருகிறார்.
இதில் ஏதாவது ஒரு பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விரைவில் சோனியா காந்தியை நேரில் சந்திக்கவும் தீர்மானிக்கப்பட்டது. பதவியிலிருந்து விலகும் வரை சுதர்சனத்திற்கு ஒத்துழைப்புத் தருவதில்லை என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இதை விட முக்கியமாக, திமுக அமைச்சரவையில் காங்கிரஸுக்குக் கண்டிப்பாக இடம் தந்தாக வேண்டும். அப்படி வழங்கும்போது ஒரிஜினல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு மட்டுமே இடம் தர வேண்டும். முன்னாள் தமாகாவினருக்கு இடம் தரக் கூடாது என்றும் முடிவு செய்யப்பட்டதாம்.
காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அடிக்கடி ரகசியமாக கூடிப் பேசுவது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.