கக்கன் மகன், பேரனுக்கு நிதியுதவி: கருணாநிதி
சென்னை:எளிைமக்கும், நேர்மைக்கும் பேர் போன தலித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான கக்கனின் மகன் மற்றும் பேரனுக்கும் தலா ரூ.1 லட்சம் வங்கியில் போடப்படுவதோடு ரூ.25,000 கையில் ரொக்க பணமாகவும் வழங்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
சட்டசபையில் காங்கிரஸ் கொண்டு வந்த ஒத்தி வைப்பு தீர்மானத்திற்கு பதிலளித்த முதல்வர் கருணாநிதி,
மதுரை மேலூரை சேர்ந்த தமிழகத்தின் மறைந்த முன்னாள் உள்துறை அமைச்சர் கக்கனுக்கு 4 புதல்வர்கள். அதில் இருவர் உயிருடன் இல்லை. அவர்களுடைய வாரிசுகள் நல்லமுறையில் வாழ்ந்து வருகின்றனர்.
ஆனால் அவரது மகன்களில் நடராசமூர்த்தி திருமணம் ஆகாதவர். இவர் மனநலம் பாதிக்கப்பட்டு 18 ஆண்டுகளாக சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் அரசு பராமரிப்பில் இலவச சிகிச்சை பெற்று வருகிறார்.
கக்கனின் இன்னொரு மகனான பாக்யநாதன் எந்தவிதமான ஆதரவும் இன்றி வறுமையில் வாடுவதாகவும், அவரது மகன் கண்ணன் வேலையின்றி சிரமமப்படுவதாகவும் மதுரை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அவரிடம் அரசு கேட்டு கொண்டதன் பேரில் அவர் விசாரணை மேற்கொண்டு இந்த விவரங்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அரசு மிகுந்த அக்கறையோடு பரிசீலனை செய்தது. பெரியவர் கக்கனின் பேரன் கண்ணன் தாங்கள் வசிக்கும் கிராமத்திற்கு வெளியில் நிலமோ அல்லது வீட்டு மனையோ பெற்றுக் கொள்ள விருப்பமில்லை என தெரிவித்துள்ளார்.
இதனால் கக்கனின் புதல்வர் பாக்யநாதனுக்கும், அவரது மகன் கண்ணனுக்கும் தலா ரூ.1 லட்சம் வங்கியில் கட்டப்படும். அவற்றிலிருந்து வரும் வட்டி பணத்தை மாத செலவிற்கு வழங்க வகை செய்யப்படும்.
அத்துடன் இருவருக்கும் தலா ரூ.25,000 கையில் ரொக்க நிதியாக வழங்கவும் இந்த அரசு உத்தரவிட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் கருணாநிதி.