இன்சூரன்ஸ் மோசடி வழக்கு- தொழிலதிபர் வீட்டில் சிபிஐ ரெய்ட்
கிருஷ்ணகிரிஇன்சூரன்ஸ் மோசடி வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டரும், அவருக்கு உதவி புரிந்த அதிகாரிகளும் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தை சேர்ந்தவர் நூருதீன். இவர் கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் மாதம் பைக்கிள் சென்று கொண்டிருந்த போது தவறி விழுந்து படுகாயமடைந்தார். அவர் பெங்களூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து பெங்களூரூ கோரமங்களா போலீசார் விசாரணை நடத்தி அந்த வழக்கை காவேரிப்பட்டினம் காவல் நிலையத்திற்கு மாற்றினர்.
அப்போது அங்கு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த ராமச்சந்திரன் என்பவர் சில மாதங்கள் அந்த வழக்கை கிடப்பில் போட்டார். பின்னர் அந்த வழக்கை விபத்து வழக்காக மாற்றினார். மேலும் காவேரிப்பட்டிணம் தொழில் அதிபர் தணிகாசலம் என்பவருக்கு சொந்தமான வேன் மோதி நூருதீன் இறந்ததாக போலி எப்ஐஆர் தயாரித்தார்.
அதன்படி வேன் டிரைவர் சத்தியமூர்த்தி என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். இதையடுத்து விபத்தை ஏற்படுத்தியதற்காக சத்தியமூர்த்தி அபராதமும் கட்டினார்.
இதையடுத்து நூருதீனின் மனைவி ஷானா பேகம் என்பவர் விபத்தில் இறந்த தனது கணவருக்கு ரூ. 45 லட்சம் நஷ்ட ஈடு தரவேண்டும் என்று கிருஷ்ணகிரி மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயத்தில் மனு கொடுத்தார். இந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயம் ரூ. 45 லட்சம் நஷ்ட ஈடு வழங்குமாறு நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.
ஆனால் நூருதீன் சாவில் சந்தேகம் அடைந்த இன்சூரன்ஸ் நிறுவனம் வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.
அதன்படி வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீஸார் நூருதீன் விபத்தில் இறந்ததாக கூறப்படுவது உண்மையே என்று கூறியது. இதையடுத்து இன்சூரன்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஏ.பி.ஷா வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.
இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் நேற்று காவேரிப்பட்டணத்தில் உள்ள தணிகாசலத்திற்கு சொந்தமான தொழிற்சாலை, வீடு, அலுவலகம் ஆகியவற்றில் சோதனை நடத்தினர். மேலும் காவேரிப்பட்டணம் காவல் நிலையத்திலும், நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் சோதனை நடத்தினர்.
இதில் பல முக்கிய ஆவணங்கல் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் வேன் டிரைவர் சத்தியமூர்த்தியிடமும் சிபிஐ போலீஸார் விசாரணை நடத்தினர். அதில் சத்தியமூர்த்தி நூருதீன் வேன் மோதி இறக்கவில்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனால் இந்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலி எப்ஐஆர் போட்ட அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர், அவருக்கு துணையாக இருந்த காவலர்கள் மற்றும் அதிகாரிகள் இந்த வழக்கில் கைது செய்யப்படுவர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்சூரன்ஸ் மூலம் கிடைக்கும் ரூ. 45 லட்சத்தை சத்தியமூர்த்தி, நூருதீனின் மனைவி, இன்ஸ்பெக்டர் ஆகியோர் பகிர்ந்து ெகாள்ள திட்டமிட்டிருந்தும் தெரியவந்துள்ளது.