சேது திட்டம்: அறிவியல், புராண ஆதாரங்களை விவாதிக்க தயார்- பாலு
டெல்லி:சேது சமுத்திர திட்டம் குறித்த அறிவியல் அல்லது புராண ஆதாரங்களை விவாதிக்க தயார் என மத்திய கப்பல் மற்றும் சாலை போக்குவரத்து துறை அமைச்சர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் சேது சமுத்திர கால்வாய் திட்டம் குறித்து இன்றும் பாஜகவினர் பிரச்சனை எழுப்பினர். பாஜக உறுப்பினர் மல்ஹோத்ரா பேசுகையில், இந்த திட்டத்தால் ராமர் பாலத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றார்.
அப்போது தமிழகத்தைச் சேர்ந்த திமுக, பாமக, இடதுசாரி கட்சி எம்பிக்கள் எழுந்து மல்ஹோத்ராவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மல்ஹோத்ராவால் தொடர்ந்து பேச முடியவில்லை.
அப்போது இடைமறித்த சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, இந்த விஷயம் நீதிமன்றத்தில் இருப்பதால் அவையில் விவாதிக்க முடியாது என அைமச்சர் பாலு நேற்று தெரிவித்திருந்தார். ஆனால், மல்ஹோத்ரா எழுப்பும் பிரச்சனை நீதிமன்ற விசாரணைக்குள் வரவில்லை. இதனால் அவரை பேச அனுமதித்தேன். நீங்களும் (தமிழக எம்பிக்கள்) பேச வாய்ப்பு தரப்படும். அமைதியாக இருங்கள் என்றார்.
ஆனால், அதை திமுக எம்பிக்கள் ஏற்கவில்லை. இது தமிழகத்தின் முன்னேற்றத்துக்கான ஒரு திட்டம். அதை யாரும் தடுக்க விட மாட்ேடாம் என கோஷமிட்டனர்.
பதிலுக்கு பாஜகவினரும் கத்தினர். தமிழக எம்பிக்களை பாலு தூண்டிவிடுகிறார் என மல்ஹோத்ரா குற்றம் சாட்டினார்.
தமிழகத்துக்கு நல்லது செய்யும் திட்டத்தை பாஜக தடுக்கிறது என திமுக எம்பிக்கள் பதிலுக்கு குற்றம் சாட்டினர். இதனால் அவையில் அமளி ஏற்பட்டது. இதையடுத்து அவையை ஒத்தி வைத்தார் சபாநாயகர்.
முன்னதாக பாலு பதிலளிக்கையில்,
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மதசார்பற்ற அணுகுமுறை மூலம், பாகுபாடின்றி திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது. சேது சமுத்திர திட்டத்தை பொறுத்தவரை அலகாபாத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்திலும் ஓம்கார் ஆனந்த் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இது ராமநாதபுரம் சார்பு நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
நீதிமன்றத்தில் சேது சமுத்திரம் தொடர்பான வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதால் நாடாளுமன்றத்தில் இது குறித்து விவாதிக்க அனுமதி தர வேண்டாம் என மக்களவைத் தலைவரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த அனைத்து கட்சி மக்களவை உறுப்பினர்களும் (அதிமுகவுக்கு மக்களவையில் எம்பி இல்லை)இதற்கு ஆதரவு தெரிவித்தனர் என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பாலு பேசுகையில்,
சேது சமுத்திர திட்டத்தின் இறுதி வடிவம் முரளி மனோகர் ஜோஷி அைமச்சராக இருந்தபோதே உறுதி செய்யப்பட்டது. அப்போதைய கப்பல் போக்குவரத்து துறைக்கான இணை அமைச்சர் திருநாவுகரசர் சேது சமுத்திர கால்வாய் பாதையை முன்மொழிந்தார்.
இதன்பின்னர் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியில் இருந்தபோது கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் வேத் பிரகாஷ் கோயல் இதற்கான அனுமதியை வழங்கினார். அப்போது இதில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என அருண்ஜெட்லி தெரிவித்தார்.
பிறகு நடந்த விவாதங்களில் வழிப்பாதை மாற்றுவதற்கான ஆலோசனைகள் நடத்தப்படவில்லை. ஆனாலும் சேது சமுத்திர கால்வாயின் ஆழம் மற்றும் அதன் தொடர்பான சில ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
எனவே ஆதம் பாலம் வழியாக கால்வாய் அமைக்கும் பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது பாஜக ஆட்சியில் தான்.
இதனை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செயல்படுத்தியுள்ளது. இருப்பினும் எங்கள் அரசு சேது சமுத்திர திட்டம் தொடர்பான அறிவியல் அல்லது புராண ஆதாரங்களை விவாதிக்கவும் தயாராகவுள்ளது என்றார் பாலு.