டிராவிட் மூக்கு உடைந்தது-லட்சுமணுக்குகேஸ் டிரபிள்-ஆட்டம் காணும் இந்தியா
கொல்கத்தா:கொல்கத்தாவில் நடந்து வரும் கிரிக்கெட் பயிற்சி முகாமில், வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி.சிங் வீசிய பந்து கேப்டன் ராகுல் டிராவிடன் மூக்கைப் பதம் பார்த்து உடைத்தது. இதனால் டிராவிடால் வங்கதேச சுற்றுப்பயணத்தில் கலந்து கொள்ள முடியுமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.
உலகக் கோப்பை தோல்விக்குப் பின்னர் இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ளது. அங்கு 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் விளையாடவுள்ளன.
இதற்கான பயிற்சி முகாம் கொல்கத்தாவில் நடந்து வருகிறது. பீல்டிங் பயிற்சி, பேட்டிங், பவுலிங் பயிற்சி உள்ளிட்டவை கொடுக்கப்பட்டு வருகின்றன. இதில், மேலாளர் ரவி சாஸ்திரி, பீல்டிங் பயிற்சியாளர் ராபின் சிங், பந்து வீச்சு பயிற்சியாளர் வெங்கடேச பிரசாத் ஆகியோரும் கலந்து கொண்டு பயிற்சி அளித்து வருகின்றனர்.
பயிற்சி முகாமிலேயே முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து காயமடைந்துள்ளனர். முதல் நாளில் ஸ்ரீசாந்த் வீசிய பந்தை அடிக்க முயன்ற சச்சின் டெண்டுல்கருக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று கேப்டன் டிராவிடின் மூக்கு உடைந்து போனது. காலையில் அவர் பேட்டிங் பயிற்சி மேற்கொண்டார். அவருக்கு ஆர்.பி.சிங் பந்து வீசினார். அப்போது ஒரு பந்து படு வேகமாக வந்து டிராவிடின் மூக்கை பதம் பார்த்தது.
மூக்கு உடைந்து ரத்தம் கொட்டி வலியால் துடித்தார் டிராவிட். உடனடியாக அவருக்கு உடற்பயிற்சியாளர் குளோஸ்டர் முதலுதவி சிகிச்சை அளித்தார். பின்னர் டிராவிட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது.
டிராவிட் மூக்கில் எலும்பு முறிவு ஏற்படவில்லை என்பது தெரிய வந்தது. அவர் 24 மணி நேரம் ஓய்வெடுக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
மூக்கு உடைந்ததால் டிராவிடால் திட்டமிட்டபடி வங்கதேசம் செல்ல முடியுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. இருப்பினும் அதற்குள் டிராவிட் குணமடைந்து விடுவார் அணி நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
சச்சினுக்கு கணுக்கால் காயம், டிராவிடுக்கு மூக்குடைப்பு என்ற வரிசையில் இன்னொரு மூத்த வீரரான வி.வி.எஸ்.லட்சுமணுக்கு வாய்வுக் கோளாறு ஏற்பட்டுள்ளதாம். இதனால் அவர் பயிற்சி முகாமில் கலந்து கொள்ளவில்லை. நேரடியாக வங்கதேசம் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசம் போய் ஆட ஆரம்பிப்பதற்கு முன்பே ஆட்டம் காண ஆரம்பித்திருக்கும் இந்திய அணி வங்கதேசத்தில் போய் என்ன செய்யப் போகிறதோ?