வட்டாரத் தமிழில் நூல்கள் கூடாது-அன்பழகன்
சென்னை:சென்னை தமிழ், மதுரை தமிழ்,கோவைத் தமிழ், நெல்லைத் தமிழ் என தமிழை வட்டார வழக்கின் அடிப்படையில் பிரிக்கக் கூடாது. வட்டாரச் சொற்களைக் கொண்டு நூல்களை இயற்றவும் கூடாது என்று நிதியமைச்சர் அன்பழகன் கூறியுள்ளார்.
காஞ்சி மணிமொழியார் தமிழ்ப் பேரவை சார்பில் மணிமொழியார் 108வது பிறந்த நாள் விழாவும், பெரியாண்டவனின் சிந்தாமணித் திறன் நூல் வெளியீட்டு விழாவும் சென்னையில் நடந்தது.
எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம். வீரப்பன் தலைமை தாங்கினார். அன்பழகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிந்தாமணித் திறன் நூலை வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் அன்பழகன் பேசுகையில், எண்ணங்களை வெளியிட உரைநடை போல எதுவும் இல்லை. தற்போது மண்ணின் வாசனையுடன் தமிழில் நூல்கள் வருகின்றன. ஆனால் சமீப காலமாக வெளியிடப்படும் நூல்களில் வட்டாரச் சொற்கள் அதிகம் தலை தூக்குகின்றன.
இப்படி எழுதுவதால் தமிழ் பல தமிழாக பிரியும் நிலை ஏற்படும். பின்னர் எந்தத் தமிழ் சிறந்த தமிழ் என்ற தேவையில்லாத விவாதங்களும் ஏற்படலாம். கடைசியில் தவறான மொழி உச்சரிப்பு உடையதே நல்ல தமிழ் என்ற நிலையும் ஏற்படலாம்.
சென்னை தமிழ், மதுரை தமிழ்,கோவை தமிழ், நெல்லை தமிழ் என தமிழைப் பிரிக்கக் கூடாது. அந்த வட்டாரங்களில் புழங்கும் சொற்களைக் கொண்டு நூல் எழுதக் கூடாது. அதுபோன்ற வட்டாரச் சொற்கள் இடம் பெற ஊக்கம் தரக் கூடாது. தமிழைத் தமிழாக, பிழையில்லாமல் அச்சில் ஏற்ற வேண்டும்.
தமிழ் இனம் பண்பாட்டை வைத்துத்தான் மதிக்க வேண்டுமே தவிர பதவிகளை வைத்து மதிக்க்க கூடாது.
தமிழ் இலக்கியத்திலேயே கடினமான இலக்கியம் எது என்றால் அது சீவக சிந்தாமணிதான். அந்த நூலை தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதய்யர் ஆய்வு நடத்தி சொல் வண்ணங்களைக் கொண்டு அச்சுக்குக் கொண்டு வந்தார்.
அந்த நூலை அச்சுக்குக் கொண்டு வர அவர் எவ்வளவு பாடுபட்டு இருப்பார். சிலப்பதிகாரம், மணிமேகலையைக் காட்டிலும் மக்களை இந்த நூல் மிகவும் கவர்ந்தது. உலக வாழ்க்கையின் உண்மையை வெளிக் கொண்டு வருவதாக இந்த நூல் அமைந்துள்ளது என்றார் அன்பழகன்.