சூடு பிடிக்கும் பீடித் தொழிலாளர் ஸ்டிரைக்;பிரதமருக்கு கருணாநிதி கடிதம்!
சென்னை:தமிழகத்தில் பீடித் தயாரிப்பாளர்கள் மேற்கொண்டுள்ள வேலைநிறுத்தம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. இதனால் தொழிலாளர்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
பீடி பார்சல்களில் மண்டை ஓட்டுப் படத்தை கண்டிப்பாக இடம் பெறச் செய்ய வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கு பீடித் தயாரிப்பாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு தனது உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என்று கோரி அகில இந்திய பீடி உற்பத்தியாளர் சங்கம் வேலைநிறுத்தத்தில் குதித்துள்ளது. தமிழகத்தில் பீடி உற்பத்தி செய்யப்படும் நெல்லை மாவட்டத்தில் பீடி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
இதனால் பீடி பொட்டலங்கள் அனுப்பப்படாமல் கிட்டங்கிகளில் தேங்கிக் கிடக்கின்றன. இவற்றின் மதிப்பு கோடிக்கணக்கான ரூபாய் எனக் கூறப்படுகிறது.
நெல்லை மாவட்டத்தில் மட்டும் 7 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து ஸ்டிரைக் நடந்தால் வேலை இழப்பு ஏற்படும் என அவர்கள் அஞ்சுகின்றனர்.
இதற்கிடையே, மத்திய அரசு தனது முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
பீடி பாக்கெட்டில் மண்டை ஓடு படம் ஒட்ட வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவால் தமிழகத்தில் உள்ள 15 லட்சம் பீடித் தொழிலாளர்கள் ஏமாற்றமும், விரக்தியும் அடைந்துள்ளனர்.
புதிய உத்தரவால் தமிழகத்தில் பீடி உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது. பீடித் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் ஜூன் 1ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் அபாயமும் உள்ளது.
மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் பீடி உற்பத்திச் செலவு அதிகம் உள்ளது. பீடி சுற்றுபவர்ளுக்கு அதிக கூலி கொடுக்கப்படுகிறது. இந்த நிலையில், மத்திய அரசின் புதிய உத்தரவு உற்பத்திச் செலவைக் குறைக்கும்.
புகைப் பழக்கம் உடல் நலனுக்கு கேடு என்பது பல வழிகள் மூலம் மக்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. அதேசமயம், மத்திய அரசின் புதிய உத்தரவால், லட்சக்கணக்கான பீடித் ெதாழிலாளர்களின் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
லட்சக்கணக்கான பீடித் தொழிலாளர்களின் குடும்பங்களை கருத்தில் கொண்டும், அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் பீடி பாக்கெட்டில் மண்டை ஓடு படம் ஒட்ட வேண்டும் என்ற முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று கோரியுள்ளார் கருணாநிதி.
இதேபோல சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணிக்கும் முதல்வர் கடிதம் அனுப்பியுள்ளார்.