காவிரி: கேரள, கர்நாடக மனுக்கள் விசாரணைக்கு ஏற்பு
டெல்லி:காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து கேரள மற்றும் கர்நாடக அரசுகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளன. விசாரணை ஜூலை மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகம் மற்றும் கேரள அரசுகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த மனுக்கள் நீதிபதி சின்ஹா, மார்க்கண்டேய கட்ஜூ ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று பரிசீலனைக்கு வந்தன. மனுக்களைப் பரிசீலித்த நீதிபதிகள் மனுக்களை விசாரணைக்கு ஏற்பதாகவும், இதுதொடர்பாக பதில் மனுக்களை தாக்கல் செய்யுமாறு நான்கு காவிரி பாசன மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர்.
கோடை விடுமுறைக்குப் பின்னர் (ஜூலையில்) இந்த மனுக்கள் விசாரிக்கப்படும் எனவும், 2க்கும் மேற்பட்ட நீதிபதிகள் கொண்ட பெஞ்சுக்கு இந்த வழக்கை அனுப்புவதாகவும் நீதிபகள் அறிவித்தனர்.
கர்நாடகத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நாரிமன் பேசுகையில், குறுக்கிட்ட நீதிபதி கட்ஜூ, நாடு முழுவதும் தண்ணீர்ப் பிரச்சினை உள்ளது. இதில் ஒரு மாநிலத்துக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டால் மற்ற மாநிலத்தில் பெரும் பேராட்டங்கள் நடத்தப்படுகிறது.
இதைத் தீர்க்க மத்திய அரசு நாட்டில் உள்ள விஞ்ஞானிகளையும், நிபுணர்களையும் அழைத்துப் பேசி நவீன தொழில்நுட்பம் மூலம் தீர்வு காண முயற்சிக்க வேண்டும் என்று யோசனை தெரிவித்தார்.
இதேபோல முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை ஜூலை 24ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.